"முடிவெடுக்கும் இடத்தில் அண்ணாமலை இல்லை.. அவரும் என்னைப் போல ஒரு நிர்வாகி தான்”.. குஷ்பு பரபர!
சென்னை: "அண்ணாமலை பாஜக-வின் ஒரு அங்கம் மட்டும் தான். என்னைப்போல அண்ணாமலையும் ஒரு நிர்வாகி தான். முடிவுகளை எடுப்பவர் அவர் கிடையாது. முடிவுகளை தேசிய தலைவர்கள் தான் எடுப்பார்கள்." என பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவர் முன்பு போல நாள்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி கருத்துகளைப் பேசுவது இல்லை. நான் யாரிடமும் வேலை செய்யவில்லை, எல்லா விஷயங்களுக்கும் நான் கருத்து சொல்ல அவசியமில்லை எனக் கூறி வருகிறார்.

நான் என்ன வேலை செய்கிறேன் என்பது பாஜகவினருக்கு தெரியும்
இந்நிலையில், பாஜக நிர்வாகி குஷ்பு, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட தடையாக இருப்பதாகச் சொல்லி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை உதறினார் குஷ்பு. அதன் பிறகும் ஆக்டிவ் அரசியலில் அவர் இருப்பது போல தெரியவில்லை. இந்நிலையில் அதுகுறித்துப் பேசி இருக்கிறார் குஷ்பு.
குஷ்பு பேசுகையில், "பத்திரிகை, ஊடகங்களில் என் முகம் தெரிந்தால் தான் நான் பாஜகவில் இருக்கிறேன் என்பது இல்லை. நான் இப்போது பாஜகவில் என்ன பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பது தான் முக்கியம். பாஜகவை மேம்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்ன வேலை செய்கிறேன் என்பது பாஜக-வில் இருப்பவர்களுக்கு தெரியும். எனக்கு தலைமை கொடுத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறேன். ஊடகங்களில் ஒரு போட்டோ, பேட்டி கொடுத்துத்தான், நான் அரசியலில் இருக்கிறேன், மக்களுக்காக வேலை செய்கிறேன் என்பதை தெரியவைக்க வேண்டிய அவசியம் கிடையாது." எனக் கூறியுள்ளார்.
முடிவெடுக்கும் இடத்தில் அண்ணாமலை இல்லை
அண்ணாமலை தரப்பினரின் செயல்பாடுகளால் தான் தீவிர அரசியலை குறைத்துக் கொண்டீர்கள் என்கிறார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள குஷ்பு, "அப்படி எல்லாம் இல்லை.. நான் கட்சியில் சேரும் போது எல்.முருகன் தலைவராக இருந்தார். அவர் தான் என் வீட்டுக்கு வந்து, என்னிடம் பேசி கட்சிக்கு அழைத்து வந்தார். நான் பாஜக-வில் இணைந்ததும், பிரதமர் மோடி என்னை தேசிய செயற்குழு உறுப்பினராக்கினார்; தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்?
எனவே, எனக்கான இடத்தை முடிவு செய்ய வேண்டியது அண்ணாமலை இல்லை. அவரும் பாஜகவின் ஒரு அங்கம் மட்டும் தான். என்னைப்போல அண்ணாமலையும் ஒரு நிர்வாகி தான். முடிவுகளை எடுப்பவர் அவர் கிடையாது. முடிவுகளை தேசிய தலைவர்கள் தான் எடுப்பார்கள். அதனால், அண்ணாமலை மீது பழி சுமத்துவதில் அர்த்தமே இல்லை." எனக் கூறியுள்ளார்.
நயினார் ஸ்டைல் வேறு
மேலும் பேசியுள்ள குஷ்பு, "தலைவர்கள் எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். வெறும் குரல் கொடுப்பது மட்டுமே அரசியல் இல்லை. நயினார் நாகேந்திரன் வந்த பிறகு, தனது பாணியில் அவர் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். அண்ணாமலை அரசியல் பாணி வேறு. நயினார் நாகேந்திரன் அரசியல் பாணி வேறு.
கூட்டணி ஆட்சியை பற்றி அமித் ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தான் முடிவு செய்வார்கள். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, நடுவில் நாம் பேசி குழப்பத்தை உருவாக்க வேண்டாம். நாங்கள் யாரை நம்பியும் இல்லை. தனித்து செயல்படுவோம். கூட்டணி இருந்தால் எங்கள் இருவரின் எதிரியான திமுகவை வீழ்த்துவது எளிது. எனினும், கூட்டணி ஆட்சி குறித்து இரு தலைவர்களும் சேர்ந்து முடிவெடுப்பார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications