"அன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு கொதித்தாரே! இன்று நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு குஷ்பு எங்கே?"
சென்னை: திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவை தகாத வார்த்தையால் விமர்சித்ததற்கு கொதித்த குஷ்பு, தற்போது நடிகை திரிஷா குறித்து கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது தவெக நிர்வாகிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள திடலில் நடந்தது. அப்போது பேசிய விஜய், அண்ணா தொடங்கிய கட்சியை ஸ்டாலின் வைத்துள்ளார். எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார்.
சுயமாக உருவான கட்சி
ஆனால் நாம்தான் சுயமாக உருவாக்கியுள்ளோம். இதுல நமக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கிறார்கள். இவர்கள் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு ஒரு சதவீதம் வாக்குகளை வாங்க சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் கட்சி தொடங்கிய நமக்கு 40 சதவீதத்திற்கு மேல் வாக்கு சதவீதம் உள்ளது என விஜய் பேசினார்.
இந்த கருத்து குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், "பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும். குடும்பத்தோடு நல் உறவு வைக்க வேண்டும்" என சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
திமுக எம்பிக்கள் கண்டனம்
இதற்கு திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன்
மேலும் ஒரு பெண்ணை கொச்சையாக பேசிய நயினார் நாகேந்திரனை பாஜக பெண் தலைவர்கள் கண்டிக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குஷ்பு குறித்து அவதூறாக பேசியிருந்தார்.
குஷ்பு கண்டனம்
இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் "பெண்கள் பற்றி அவதூறாகப் பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது... கருணாநிதி இருந்தபோது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் குறித்து தவறாகப் பேச யாருக்கும் தைரியம் வரக் கூடாது. வந்தால் திருப்பி அடிப்போம்.
இது சரியா
உங்கள் வீட்டுப் பெண்களை இப்படிப் பேசுவீர்களா... உங்கள் மொழியிலேயே என்னால் பதில் கொடுக்க முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது என் அம்மாவை அசிங்கப்படுத்துவதற்குச் சமம். என் வளர்ப்பை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. இது போன்ற செயல்கள் சரியா... இதுதான் திராவிட மாடலா... என்னைச் சீண்டிப் பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள்" என்று கண்கலங்கியபடி பேசினார்.
தவெகவினர் கண்டனம்
இதை தவெகவினர் நினைவுகூர்ந்து வருகிறார்கள். அன்று பெண்களை இழிவாக பேசியதற்காக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கொதித்த குஷ்பு, இன்று நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கோபப்படாதது ஏன் என கேள்வி எழுப்புகிறார்கள். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது மிகவும் மோசமான பேச்சு, அப்படி பேசக் கூடாது என்பதுதான் அனைவரின் கண்டனமாக இருந்தது. ஆனால் இன்று திரிஷாவை பற்றி நயினார் நாகேந்திரன் அரசியல் நாகரீகம், பொது நாகரீகம் இல்லாமல் பேசி வருகிறார், அவரை ஒருவரும் கண்டிக்கலையே என தவெகவினர் சமூகவலைதளங்களில் விவாதங்களை நடத்தி வருகிறார்கள்.
நடிகை குஷ்பு என்றில்லை, வானதி, தமிழிசை உள்ளிட்டோரும் மவுனம் காத்து வருகிறார்கள். பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் கூட நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications