மேடையில் மன்னிப்பு கேட்கணும்.. “அவன் கோழை”.. கோர்ட் ஏற்றுக்கொண்டாலும் ஆவேசமாக கொந்தளிக்கும் குஷ்பு!
சென்னை : சைதை சாதிக் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும் எனது சகாக்களையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும் என விளாசியிருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ.
திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக் பேசியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற, மன்னிப்புக் கோர வேண்டும் என்ற நிபந்தனையின்படி, மன்னிப்பு கேட்டதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் சைதை சாதிக்.
இந்நிலையில், எங்களிடம் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. எங்களை அவமதித்த மேடையிலேயே அவர் மன்னிப்பு கேட்கட்டும் என கொந்தளித்துள்ளார் குஷ்பூ.
சைதை சாதிக் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்! பரபர!

சைதை சாதிக் சர்ச்சை பேச்சு
கடந்த மாதம் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பேசிய திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பற்றி அவதூறான கருத்துகளை ஆபாசமாக பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகை குஷ்பூ இதுதொடர்பாக ட்விட்டரில் கண்டித்திருந்தார்.

பொங்கி எழுந்த பாஜக
சைதை சாதிக் பேச்சு விவகாரம் பெரும் விவாதமானதைத் தொடர்ந்து, தன் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தான் பேசியது வருத்தம் அளித்திருந்தால் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் சைதை சாதிக். எனினும் பாஜக மகளிர் அணி சார்பில் சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதை அடுத்து சைதை சாதிக் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மன்னிப்பு கேட்கவேண்டும்
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டிருந்தார் சைதை சாதிக். இந்த மனு கடந்த 25ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளை பேசியிருக்கும் சைதை சாதிக் இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என்று பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் விசாரணையை 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மன்னிப்பு கேட்ட சாதிக்
அதுவரை சைதை சாதிக்கை போலீசார் கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி மன்னிப்பு கேட்டு, இனிமேல் இப்படி பேசமாட்டேன் என்று பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார் சைதை சாதிக். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணை அதிகாரி முன்பு ஒரு வாரத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.

மேடையில் மன்னிப்பு கேட்கட்டும்
ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத குஷ்பு, என்னிடமும், எனது சகாக்களிடமும் அவர் மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. என்னையும் எனது சகாக்களையும் அவமதித்த மேடையில் அவர் மன்னிப்பு கேட்கட்டும். அவன் கோழை. அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்." எனத் தெரிவித்துள்ளார்.