நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் விஜய் எளிதாக வெற்றி பெற்று முதல்வராகிவிட்டார், அவர் மீது எனக்கு லேசாக பொறாமை வந்துவிட்டது. நானும் அரசியலில் 15 ஆண்டுகளாக இருந்து வருகிறேன், என்னால் இது போன்ற ஒரு வெற்றியை கொடுக்க முடியவில்லை என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக எளிதாக வெற்றி பெற்றுவிட்டது. எனக்கு விஜய் மீது லேசான பொறாமை ஏற்பட்டுள்ளது. பிரம்மாண்டமான முறையில் விஜய் முதல்வராகியிருக்கிறார்.

விஜய்யின் உருவத்தை ஹோலோகிராமில் கொண்டு வந்தும், கட் அவுட்களை வைத்தும் அவரது கட்சியினர் பெருவாரியான வெற்றியை கொடுத்துள்ளனர். நானும்தான் 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு பெரிய வெற்றியை நான் பார்த்ததே இல்லை.
அரசியல் கட்சியை நடத்த வேண்டுமென்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏதேனும் பேச வேண்டுமென்றால் அது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும். தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் நாம் ஏன் ஆந்திராவில் கூட்டணியை அமைத்தோம் என்ற கேள்வியை எனது ஆதரவாளர்கள் எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் ஆந்திராவுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் அரசியல் சூழல் என்பது வேறுபட்டுள்ளது. சமூக மாற்றம் வேண்டுமென்ற நோக்கத்துடன் அரசியல் கட்சியை நான் தொடங்கினேன். முன்னாள் முதல்வர் என்டிஆரின் அரசியல் பயணத்தை பார்த்துள்ளேன். அதே நேரத்தில் நக்சலிச கொள்கைகளுக்காக இளைஞர்கள் உயிர்த் தியாகம் செய்ததையும் நான் பார்த்துள்ளேன்.
அந்த அனுபவங்கள் என்னை ஆழமாக சிந்திக்க செய்தது. அதனால் எனக்கு பொது வாழ்வில் பதவி மற்றும் அதிகாரத்தை காட்டிலும் சித்தாந்தம், கொள்கை மிகவும் முக்கியம் என கருதுகிறேன். அந்த எண்ணத்துடன்தான் இந்த கட்சியை வழிநடத்துகிறேன்.
தேர்தலில் நாம் தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது என இப்போது நீங்கள் எல்லோரும் கருதலாம். அப்படி நம் கட்சியின் தொண்டர்கள் சொல்வது எனது காதிலும் படுகிறது. நாம் தனித்து போட்டியிட்டிருக்கலாம்.
மசூலிப்பட்டினம் கூட்டத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் திரண்டார்கள். ஆனால் ஆந்திரா இப்போது எதிர்கொண்டுள்ள சூழல் என்பது மிகவும் இக்கட்டான காலகட்டம். சந்திரபாபு நாயுடு மாதிரியான ஒரு தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார். அத்தகைய சூழலில்தான் நாம் ஆதரவை தெரிவித்தோம். இது நம் மாநிலத்தின் எதிர்காலம் சார்ந்த முடிவு என பவன் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அவர்கல் சமூகவலைதளங்களில் கூறியிருப்பதாவது: "எந்த வெற்றியும் எளிதாக கிடைத்துவிடாது. அதற்காக நாங்கள் செய்த உழைப்பும், கஷ்டங்களும் ஏராளம். அதை பார்க்காமல் எளிதாக வெற்றி பெற்றுவிட்டதாக சொல்லி விடலாமா?
வெறும் கட் அவுட் மற்றும் ஹோலோகிராம்களை மட்டும் வைத்து வெற்றி பெற்றிருப்பதாக சொல்ல முடியாது. இந்த வெற்றிக்கு தவெகவினர் பட்ட கஷ்டங்களை பவன் கல்யாண் மொத்தமாக புறக்கணித்தால் எப்படி?
கரூர் விவகாரம், விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி தராதது, குடும்ப வாழ்க்கையை இழந்தது, அமலாக்கத் துறை வழக்கு என ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியில் விஜய் முதல்வராகியிருக்கிறார். எனவே விஜய் எளிதாக வெற்றி பெற்றிருக்கிறார் என சொல்லாதீர்கள். இவ்வாறு சமூகவலைதளத்தில் தவெகவினர், பவனுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications