சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம்
சென்னை: சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனை என்பது வட சென்னையின் மிக முக்கியமான அரசு மகேப்பேறு மருத்துவமனையாகும். இங்கு தினமும் ஏராளமான பெண்கள் சிகிச்சை பெறுகிறார்கள். அப்படி சிகிச்சைக்கு வந்த முகலிவாக்கம் கீதா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவரது குழந்தையை டிஎன்ஏ திரைப்பட பாணியில் கடத்திய பெண், கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தை பார்ப்போம்.
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த 29 வயதாகும் கீதா என்பவர் கடந்த 13-ந் தேதி பிரசவத்துக்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 15-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரது கணவர் தேவராஜ், வேலைக்கு சென்று விடுவாராம். இதனால் மருத்துவமனையில் தனியாக இருந்த கீதா, உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துள்ளார். இதனை கவனித்த பெண் ஒருவர், கடந்த 8 நாட்களாக உதவி செய்வது போல் பழகி வந்துள்ளார்.

கடந்த 24ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போது கணவர் உடன் வராததால் கீதாவே ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போதும் அந்த பெண், அவருடன் வீட்டுக்கு வந்து இறக்கி விடுவதாக கூறி, குழந்தையை வாங்கிக்கொண்டு கீதாவை அங்குள்ள மக்கடை அருகே நிற்கும்படி கூறியுள்ளார். அங்கு ஆட்டோ பிடித்து வருவதாக கூறிச்சென்ற பெண், குழந்தையை ஆட்டோவில் கடத்திச்சென்று விட்டார்.
இது குறித்து கீதா அளித்த புகாரின்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி கமிஷனர் பிரம்மாநந்தன் மேற்பார்வையில் காசிமேடு இன்ஸ்பெக்டர் மைனர் சாமி தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர்.
அப்போது குழந்தையை கடத்திச் சென்ற பெண், புளியந்தோப்பு வ.உ.சி. நகர் 8-வது தெருவிற்கு போயிருக்கிறார். அங்கு அவரை மடக்கிப்பிடித்தனர். குழந்தையையும் மீட்டனர். விசாரணையில் அவர், கொடுங்கையூர் தென்றல் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த அமுலுக் பவ்ரோஸ் மேரி (29) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அப்போது அவர், அது தன்னுடைய குழந்தை என போலீசாரிடம் கூறினார். அவருடைய கணவர் தாமஸ் (32), தாய் முருகேஸ்வரி (58) ஆகியோரும் அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்கள். இதனால் குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அமுலுக் பவ்ரோஸ் மேரி, அந்த குழந்தை தனது குழந்தை இல்லை எனவும், தான் கடத்தியதையும் ஒப்புக்கொண்டார். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறுகையில், "எனக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனது. கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வந்தேன். நான் கருத்தடை செய்து கொண்டேன். அதன்பிறகு தாமஸை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். நான் கருத்தடை செய்தது அவருக்கு தெரியாது. அவர் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருந்தார். இதனால் நான், கர்ப்பமானதாக அவர் மற்றும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க முடிவு செய்தேன்..
எனக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டது. பின்னர் 10 மாதம் ஆனதும் பிரசவ வலி ஏற்பட்டதாக கூறி ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வந்தேன். மருத்துவமனையில் உள்ளவர்களிடம் கருத்தடை செய்ய வந்திருப்பதாக கூறி நம்ப வைத்தேன். அப்போதுதான் கீதாவுக்கு குழந்தை பிறந்ததும், அவர் துணையின்றி தனியாக இருப்பதும் தெரிந்தது.
இதனால் அவரது குழந்தையை கடத்திச்சென்று, எனக்கு பிறந்த குழந்தை என கணவர் உள்ளிட்டோரை நம்ப வைக்கலாம் என முடிவு செய்தேன். அதன்படி அவருக்கு உதவி செய்வதுபோல் நடித்து குழந்தையை கடத்திச்சென்றேன். எனக்கு குழந்தை பிறந்து உள்ளதாக கூறி அக்கம் பக்கத்தினருக்கு இனிப்பு கொடுத்தும் நம்ப வைத்தேன்" இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அமுலுக் பவ்ரோஸ் மேரி, உடந்தையாக இருந்ததாக அவரது கணவர் தாமஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.














Click it and Unblock the Notifications