பெட்ரோல் குண்டு: இதெல்லாம் கோழைத்தனம்.. தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோதுங்கள்.. குஷ்பு ட்வீட்!
சென்னை: தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவு 1.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு கோபத்தில் இப்படி செய்துவிட்டதாக வினோத் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் அறிக்கையில் கூறியுள்ளனர்.

மனநிலை
முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும் இவர் இவ்வாறு பொது பிரச்சினையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

உள்ளாட்சி தேர்தல்
இன்றைய தினம் உத்தரப்பிரதேச சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் 9 நாட்களில் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் இது போன்ற அசம்பாவித சம்பவத்தை பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளார்கள். இதுகுறித்து குஷ்பு மிகவும் காட்டமாக ட்வீட் போட்டுள்ளார்.

பெட்ரோல் குண்டு
அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சால் யாருக்கும் காயம் ஏற்படாததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது கோழைத்தனமான செயல் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நேருக்கு நேர்
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட்டுவிட்டு எங்களுடன் நேருக்கு நேர் மோதி பார்க்க தைரியத்தை வளர்த்து கொள்ளுங்கள் என குஷ்பு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய இணையமைச்சர் எல் முருகனும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications