கோர்ட் உத்தரவுகளை காணோம்! கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில் காலதாமதம்? ஏன் என்னாச்சு?
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மிகப் பெரிய செலவில் அமைக்கப்பட்டு வந்தாலும் அதில் சில குறைகள் இருப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இது 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியின் உத்தரவின்பேரில் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 2002 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என பெயரிட்டிருந்தார். இந்த இடத்தில் 160 பிளாட்பார்ம்கள் உள்ளன. இதன் பட்ஜெட் 103 கோடி ரூபாய் ஆகும். இதன் பரப்பளவு மொத்தம் 36.5 ஏக்கர் ஆகும். இந்த பேருந்து நிலையத்தில் லாக்கர் ரூம்கள், ஹோட்டல்கள், சிறிய உணவு கடைகள், ஏடிஎம்கள், 10 டிராவல் ஏஜென்சி அலுவலகங்கள், தங்கும்மிடங்கள் உள்ளன.
என்னதான் இத்தனை வசதிகள் இருந்தாலும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது. அதிலும் தென் தமிழகம் செல்லும் பயணிகள் கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்தை ஊர்ந்து சென்று சொந்த ஊர்களுக்கு போவதற்குள் போகும் போகும் என்றாகிவிடுகிறது. இதனால் அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கின.
பார்ப்பதற்கு சும்மா ஏர்போர்ட் போல் இருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. சில மழைநீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் திறப்பு விழா தாமதமாகிறது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இது கோயம்பேடு பேருந்து நிலையத்தை விட பெரியது. அதாவது 88 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 393 கோடியாகும். பொதுவாகவே பேருந்து நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுடன் சிஎம்டிஏ அதிகாரிகளும் உடனிருந்தனர். பேருந்து நிலையத்தில் தரைபகுதியில் மேடு பள்ளங்கள் இருப்பதாகவும் பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் தொட்டு உணரக் கூடிய வழிகள் இல்லை. சாய்தளங்களும் மிகப் பெரியதாக இருக்கிறது. இதனால் சக்கர நாற்காலியை பயன்படுத்துவோருக்கு பிரச்சினைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
பிரெய்லி எழுத்துகளால் இந்த பேருந்து நிலையத்தில் பொறிக்கப்படவில்லை. இதனால் பார்வையில்லாதோர் இந்த பேருந்து நிலையத்தை பிறர் உதவியின்றி இயக்க முடியாது. எனவே அரசு கூடுதலாக செலவு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இந்த பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை சிஎம்டிஏ அதிகாரிகளிடம் அறிக்கையாக தெரிவித்துள்ளனர். எனவே இந்த பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கூறிய விஷயங்களை செய்து முடித்தபிறகே இது பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. எனவே இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்க மேலும் கால தாமதம் ஆகும் என தெரிகிறது. மேலும் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இந்த கால மழைக்கு பேருந்து நிலையத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றதா என பார்த்துவிட்டு பிறகு பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications