கிளாம்பாக்கத்தில் சூப்பர் வசதி.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலும் சர்ப்ரைஸ்.. இன்று 3,519 பேருந்துகள் ரெடி
சென்னை: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இன்றும், நாளையும் சுபமுகூர்த்த நாட்களாகும்.. அதனை தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருகின்றன.. இப்படி அடுத்தடுத்து விடுமுறை வருவதால், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.. ஒரே நேரத்தில் அனைவரும் கிளம்பி செல்வதால், பஸ், ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாகும்.. இந்த நெரிசலை தவிர்க்கவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரசு போக்குவரத்து கழகம், ரயில்வே நிர்வாகம் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு என கடந்த 2023 ல் 305 சிறப்பு ரயில்களும் 2024 ல் 358 சிறப்பு ரயில்களையும் இயக்கி இருந்தோம். அது தற்போது 380 ஆக உயர்த்தி உள்ளோம்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மத்திய ரயில்வே சார்பில் அதிகபட்சமாக, மஹாராஷ்டிரா மற்றும் கொங்கன் வட்டாரத்தில் 296 ரயில்களும் மேற்கு ரயில்வே சார்பில் 56 ரயில்களும் தெற்கு ரயில்வே சார்பில் 22 ரயில்களும் கொங்கன் ரயில்வே சார்பில் 6 ரயில் சேவைகளும் இதில் அடங்கும்.இதில் கொங்கன் வட்டாரப்பகுதி ரயில்கள் கொலாட், மங்கோன், சிப்லன், ரத்னகிரி, கனகவல்லி, சிந்துதர்க், கூடல், சவந்த்வாடி சாலை, மத்கோன், கர்வார், உடுப்பி மற்றும் சுரத்கல் வழியாக செல்லும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மற்றொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஸ்பெஷல் பஸ்கள்
தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமும் சிறப்பு பஸ்கள் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன..
இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று புதன்கிழமை (27.08.2025) விநாயகர் சதுர்த்தி, நாளை வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் 875 பஸ்கள் ரெடி
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நேற்றிலிருந்து (26.08.2025 - செவ்வாய்கிழமை) 675 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
வியாழக்கிழமை (28.08.2025) 610 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை (29.08.2025) 405 பேருந்துகளும், சனிக்கிழமை (30.08.2025) 380 பேருந்துகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு
அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்கிழமை 110 பேருந்துகளும், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் 90 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 26.08.2025, 28.08.2025 மற்றும் 29.08.2025 ஆகிய நாட்களில் 24 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கம்
இன்று 27ம் தேதி 11,961 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,265 பயணிகளும் சனிக்கிழமை அன்று 4,294 பயணிகளும் ஞாயிறன்று 9,567 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications