டாப் கியர் போட்டு ஏறுது கிளாம்பாக்கம்.. பயணிகளின் கனிவான கவனத்திற்கு! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
சென்னை: சென்னை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தென் மாவட்ட அரசு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதிநவீன வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மின்சார ரயில் வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதை அடுத்து தற்போது கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடைய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை அசுர வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் குவிந்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்து இருக்கின்றனர்.
இதனால் சென்னை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக சென்னையின் மையப்பகுதியில் இருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் கிளாம்பாக்கத்தில் உலக தரத்திலான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 2023ஆம் ஆனடு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது. இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் எஸ்கலேட்டர், தங்குமிடம், நவீன கழிப்பறை, உணவகம் என பல வசதிகள் அங்கு இருக்கிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
இருந்தபோதும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் வந்து செல்ல மக்கள் அவதி அடைந்தனர். இதனால் அங்கு ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் தாம்பரம் வரை மட்டும் தான் வர முடியும். அதிகபட்சம் வண்டலூர் வரை ரயிலில் செல்லலாம். ஆனால், அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல வாடகை ஆட்டோக்கள், கார் போன்றவற்றை தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்குமென குற்றம் சாட்டப்பட்டது.
ரயில் நிலைய பணிகள்
இதனையடுத்து கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது முதல் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
சேகர்பாபு அறிவிப்பு
இந்த நிதியுதவி மற்றும் தமிழக அரசின் அழுத்தத்தின் காரணமாக, தென்னக ரயில்வே பொது மேலாளர் சமீபத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 2026 ஜனவரி மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்கிறார்கள். அதே நேரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை தை பொங்கலுக்கு முன்பாகவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசின் சார்பில் தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications