தமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் அகங்காரம்,ஆணவத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் தாக்கு
Recommended Video
சென்னை: தலைநகர் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மற்றும் வறட்சி விவகாரத்தில், தமிழக மக்களை தரக்குறைவாக விமர்சித்த புதுவை ஆளுநர் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கிரண்பேடி, சென்னை தண்ணீர் பஞ்சம் மற்றும் வறட்சி தொடர்பாக நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்தல்ல, மக்களின் கருத்தே. மக்களின் கருத்தையே நானும் பிரதிபலித்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து, புதுச்சேரி மாநில கவர்னரான கிரண்பேடி கருத்து தெரிவித்தருந்தார். அதில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மோசமான ஆட்சியே, தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவிர மக்களின் சுயநலமும், மோசமான, கோழைத்தனமான அணுகுமுறையும் கூட தண்ணீர் பிரச்சனைக்கு காரணம் என காட்டமாக விமர்சித்திருந்தார்.
கிரண்பேடியின் இந்த விமர்சனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு வகிக்கும் கிரண்பேடியின், அகங்காரம் கலந்த விமர்சனத்தை, திமுக கடுமையாக கண்டிப்பதாக, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சனையை பற்றி கருத்து கூறியுள்ள கிரண்பேடி, தமிழக மக்களை கோழைகள் என அநாகரீகமாக விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் மீதான கிரண்பேடியின் விமர்சனம் ஆணவத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி ,ஆதிக்க மேலாண்மையின் அடையாளமாக தெரிவித்ததாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில அரசு நிர்வாகத்தை திட்டமிட்டு முடக்கி உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கியவர் கிரண்பேடி. அவருக்கு தமிழக மக்களை பற்றியோ, தமிழக அரசு பற்றியோ கருத்துரிமை கிடையாது. எனவே தண்ணீர் பஞ்சம் குறித்து தமிழக மக்கள் மீதான விமர்சனத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
மேலும் அத்துமீறி செயல்படும் கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பிலிருந்து குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற்று, அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications