வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள்
சென்னை/கோவை: ₹6000-ஐத் தொட்ட சிலிண்டர் விலையால், தமிழகத்தின் அடையாளமான உணவகங்கள் கண்ணீருடன் கதவுகளை மூடுகின்றன. சென்னை முதல் கோவை வரை அணைந்து வரும் அடுப்புகள், வெறும் கடையடைப்பு அல்ல; லட்சக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வாதாரம் அழிந்துள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். சாலையோர உணவம் நடத்தி பிழைத்த பலர் சிலிண்டர் வாங்க முடியாமல் கடைகளை மூடியுள்ளனர்.
தமிழகத்தின் உணவுக் கலாச்சாரம் இன்று ஒரு மிகப்பெரிய மௌனப் போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் மசாலா வாசனையும், கரண்டிகளின் சத்தமும் நிறைந்திருக்கும் சென்னை மற்றும் கோவையின் வீதிகள் இன்று வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. காரணம், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை கட்டுக்கடங்காமல் ₹5000 முதல் ₹6000 வரை எகிறி நிற்பதுதான். இது உண்மையான விலை அல்ல.. ஆனால் தட்டுப்பாடு காரணமாக அவ்வளவு விலை கொடுத்து தான் கடை சிலிண்டரை வாங்க வேண்டிய நிலை இருக்கிறது,

இது வெறும் விலை உயர்வு அல்ல; லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கப்பட்டிருக்கும் சாட்டை அடி. ஒரு காலத்தில் ₹1000 முதல் ₹2000-க்குள் இருந்த சிலிண்டர் விலை, இன்று ஒரு சாதாரண ஹோட்டல் உரிமையாளரின் ஒரு நாள் லாபத்தையே விழுங்கி வருகிறது. அதனால் கடையை மூடிவிட்டார்கள்.
மூடப்படும் அடுப்புகள்
சென்னையின் தி.நகர் முதல் கோவையின் ஆர்.எஸ்.புரம் வரை, பல தசாப்தங்களாக இயங்கி வந்த பாரம்பரிய உணவகங்கள் கூட இன்று தங்கள் கதவுகளை மூடி வருகின்றன. "ஒரு தோசைக்கு ₹50 வாங்கினால் நஷ்டம், ₹100 வாங்கினால் மக்கள் வரமாட்டார்கள். இதற்கு கடையை மூடுவதே மேல்," என வேதனையுடன் கூறுகிறார் கோவையைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் உரிமையாளர்.
தொழிலாளர்கள் அவதி
இந்த விலை உயர்வால் ஹோட்டல்கள் மட்டும் மூடப்படவில்லை; அதை நம்பியிருந்த சமையல் கலைஞர்கள், பரிமாறுபவர்கள் என பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. காலையில் வேலைக்குச் சென்றால் மாலையில் சம்பளம் என்றிருந்த பலரது வாழ்க்கை, இன்று அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அரசின் கவனத்திற்கு
உணவுத் தொழில் என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. மளிகை பொருட்கள், காய்கறிகள் என பல தொழில்கள் இதனுடன் இணைந்தவை. சிலிண்டர் விலை உயர்வு இந்தச் சங்கிலியைத் துண்டித்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு வணிக எரிவாயு 5000, 6000க்கு விற்பதை தடுக்காவிட்டால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஓட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications