உலக மக்களால் பாராட்டப்படும் தமிழகம்! காரணமே ஸ்டாலின் தான்! கொங்கு ஈஸ்வரன் பாராட்டு மழை!
சென்னை: சர்வதேச அளவிலான செஸ் போட்டியை எந்த குறையும் இல்லாமல் நடத்தியதற்காக உலக மக்களால் தமிழகம் பாராட்டப்படுவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக அரசுக்கு அறிவுரை கூறும் விதமாக அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஈஸ்வரன் இப்போது யு டர்ன் அடித்திருக்கிறார்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலினை பாராட்டி அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

உலக மக்களால்
சர்வதேச அளவிலான போட்டிகளை ஒரு நாடு பொறுப்பேற்று நடத்தும் பொழுது சிறப்பாக நடத்தினால் அந்த நாடு பாராட்டப்படும். ஆனால் முதல்முறையாக சிறப்பாக நடத்திய ஒரு மாநிலம் உலக மக்களால் பாராட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டமிடல் இந்திய நாட்டிற்கு பெருமை தேடி தந்திருக்கிறது. இந்திய அரசு தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து செஸ் போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பு கொடுத்ததை குறுகிய காலத்தில் திட்டமிட்டு சிறப்பாக நடத்தி தமிழர்களின் பெருமைகளை தமிழக அரசு பரைசாற்றியிருக்கிறது.

எந்த குறையும் இல்லாமல்
போட்டிகளின் துவக்க நிகழ்ச்சி ஆகட்டும், நிறைவு விழா ஆகட்டும், வீரர்களை வரவேற்பது ஆகட்டும், வீரர்களுக்கான உணவு ஏற்பாடு ஆகட்டும் எதிலுமே எந்த குறையும் இல்லாமல் நிறைவாக செய்து பாராட்டைப் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை. இதுவரை நடந்த எந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளும் இந்த அளவிற்கு சிறப்பாக நடைபெறவில்லை என்று அகில உலக செஸ் சம்மேளன நிர்வாகிகள் பாராட்டு வாசித்திருப்பது உலக தமிழர்கள் அனைவருக்குமான பெருமை.

மிகச் சிறந்த திட்டமிடல்
செஸ் போட்டிகளுக்கான விழிப்புணர்வை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தி நானும் செஸ் போட்டிகளுக்கு தயாராக வேண்டும் என்ற எண்ணத்தை தமிழக மக்களிடையே முதலமைச்சர் விதைத்திருக்கிறார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் குழு உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் ஒன்றிணைந்து மிகச் சிறந்த திட்டமிடலோடு நடத்தி இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. செஸ் விளையாட்டுகளின் பிறப்பிடமான தமிழகத்திலிருந்து இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் எதிர்காலத்தில் உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
Recommended Video

முதலமைச்சருக்கு பாராட்டு
இந்த சிறப்பான நிகழ்வு செஸ் போட்டிகளைத் தாண்டி அனைத்து விளையாட்டுகளிலுமே தமிழகம் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்தியா மட்டுமில்லாமல் அனைத்து நாடுகளும் வியக்கும் வண்ணம் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னின்று நடத்திய தமிழக முதலமைச்சருக்கு பாராட்டுக்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications