ரஜினிகாந்த்... கமல்ஹாசனால்... திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது... வாக்குகள் சிதறாது -கே.என்.நேரு
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறாது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசனால் ஏற்படும் போட்டியை சமாளிக்கவே தாங்கள் மக்களிடம் செல்வதாக தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும் தங்களுக்கு கவலையில்லை என்றும் அது திமுகவுக்கு தான் சாதகமாக அமையும் எனவும் நேரு நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவாக வாய்ப்பிருந்தால் நடிகர்கள் சிலரும் பிரச்சாரத்துக்கு வருவார்கள் என்றும் அது ஸ்டாலின் எடுக்கக்கூடிய முடிவு எனவும் தெரிவித்தார்.
இதனிடையே டிசம்பர் 23-ம் தேதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்வார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருந்த நிலையில், ஜனவரி 1-ல் இருந்து 10 தேதிக்குள் ஏதாவது ஒரு தேதியில் அவர் பிரச்சாரத்தை தொடங்குவார் என விளக்கம் அளித்தார். மேலும், திமுக நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து தேர்தல் வேலை வாங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதி மற்றும் நேரத்தில் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பிரச்சாரத்தை தொடங்கட்டும் திமுக தான் வெற்றிபெறும் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications