பொதுச் செயலாளர் பதவி எனக்கு முள் கிரீடம்தான்.. கண் கலங்கியபடி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: முதுகுக்கு பின்னால் யார் யார் என்னென்ன பேசுகிறீர்கள் என்று தனக்குத் தெரியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுக்குழுவில் சீறியிருக்கிறார்.
தன்னை பற்றி முதுகுக்கு பின்னால் இல்லாததும் பொல்லாததும் சிலர் பேசுவதை தெரிந்தும் தாம் பொறுமையாக எதுவும் தெரியாதது போலவே இருப்பதாக ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு காரணம் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே தவிர வேறு இல்லை எனத் தெரிவித்தார். தன்னை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவியை முள் கிரீடமாகவே பார்க்கிறேன் என்றும் தனக்கு பொறுப்புகள் கூடியிருப்பதால் தாம் டென்ஷனாக இருக்கிறேன் எனவும் பேசினார்.

ஆனால் ஒன்றை மட்டும் தேமுதிகவினர் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டு பேசிய பிரேமலதா, அரசியலில் தாம் எதற்கும் பயப்படமாட்டேன் என்றும் சவால் என்று வந்துவிட்டால் சவால் தான் சமரசமே கிடையாது எனவும் ஆவேசம் காட்டினார். தன்னுடன் கட்சிக்காக சேர்ந்து உழைக்க நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தன்னிடம் யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
கட்சி தொடர்புடைய எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நிர்வாகிகள் தன்னிடம் நேரடியாக டிஸ்கஸ் நடத்தலாம் என்றும் இடையே குறுக்கீடே இருக்காது என்ற உறுதியையும் அளித்துள்ளார். இதன் மூலம் தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகள் சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். தொண்டனாக இருந்தாலும் சரி, நிர்வாகிகளாக இருந்தாலும் சரி நேரடியாக தன்னை சந்தித்து பேசலாம் என்றும் தேமுதிகவினரை முக்கிய பொறுப்புகளில் அமர வைக்கும் வரை தாம் ஓயமாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
தேமுதிகவினர் உண்மையாக, ஒற்றுமையாக கட்சிக்கு உழைக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தேமுதிகவை ஆட்சியில் அமர வைக்கும் நாள் தான் விஜயகாந்தின் லட்சியம் நிறைவேறிய நாளாக அமையும் எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications