கோடநாடு வழக்கு- மர்ம மரணங்கள் தொடர்பான விசாரணை தீவிரம்- மேலும் 30 சாட்சிகளை சேர்க்க திட்டம்!
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மர்ம மரணங்கள் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் 30 சாட்சிகளை சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு டீ எஸ்டேட் பங்களாவில் 2017-ம் ஆண்டு மர்ம சம்பவங்கள் அரங்கேறின. இதில் ஓம்பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். மேலும் கோடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் இறந்து போனார்.

சினிமாவை மிஞ்சிய மர்ம மரணங்கள்
அதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய சயான் சென்ற கார் மர்மமான முறையில் விபத்துக்குள்ளானது. இதில் சயானின் மனைவி, மகள் மரணம் அடைந்தனர். பின்னர் கோடநாடு வழக்கில் சி.சி.டி.வி. காட்சிகள் முக்கியமானவை எனக் கூறப்பட்டன. அந்த நிலையில் சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அடுத்தடுத்த சினிமாவை மிஞ்சுகிற மர்ம மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு
இதன் அடுத்த கட்டமாக இவ்வழக்கில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக சயான் உள்ளிட்டோர் பரபரப்பான தகவலை தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்தது. அதிமுக ஆட்சியில் இந்த வழக்கும் அப்படியே கிடப்பில் கிடந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு உயிர்பெற்றது.

மீண்டும் விசாரணை
நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மறுவிசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மறுவிசாரணைக்கு தடை கோரி சாட்சிகளில் ஒருவரான அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோரையும் சேர்க்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மரணங்கள் தொடர்பாக விசாரணை
இந்நிலையில் கோடநாடு விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்பட்டவர்களின் மர்ம மரணங்கள் தொடர்பான விசாரணை படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. தற்போது கனகராஜின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தூக்கிட்டு இறந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் தரும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டும் வருகின்றன.

மேலும் 30 சாட்சிகள்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஏற்கனவே 103 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது மேலும் 30 சாட்சிகளை சேர்க்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனடிப்படையில் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகும் அறிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications