நீங்க ஒருங்கிணைப்பாளராதானே இருந்தீங்க! ஏன் அங்கேயே வாறீங்க? செய்தியாளர்களிடம் கடுகடுத்த ஓபிஎஸ்
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைவாக விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஓபிஎஸ் அறிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தனர்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தற்போது தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்த நிலையில், கட்சியை முழுமையாக எடப்பாடி பழனிசாமி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

ஓ பன்னீர் செல்வம் நடத்திய சட்ட போராட்டங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை ஒருபக்கம் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனது காய் நகர்த்தல்களை தொடங்கி விட்டார்.
டிடிவி தினகரனை சந்தித்து இருக்கும் ஓ பன்னீர் செல்வம் சசிகலாவையும் விரைவில் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் தரப்பினர், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது , எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாகவோ மறைமுகமாக தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுகிறீர்களா? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், காவல்துறை செய்ய வேண்டிய வேலை இது. சட்டப்படி தீர விசாரித்து யாரெல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்களோ அவர்களை கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறை. அதை செய்ய வேண்டியது தமிழக அரசு. அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதற்காகத்தான் ஆர்ப்பட்டம் செய்ய இருக்கிறோம்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், கோடநாடு சம்பவம் நடைபெற்ற போது தமிழக அரசில் நீங்கள் தானே இருந்தீர்கள் என்று கேட்ட போது, "துணை முதல்வருக்கு அரசில் எந்த வித அதிகாரமும் இல்லை. நான் வகித்த துறையில் மட்டும் தான் எனக்கு அதிகாரம் இருந்ததே தவிர சட்டம் ஒழுங்கு காவல்துறை அதிகாரம் எல்லாம் எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. முதல்வராக இருந்தவர்களுக்குதான் இந்த பொறுப்பு இருந்தது" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், உயர் பதவியில் இல்லை என்று சொல்கிறீர்கள்...அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நீங்கள்தானே இருந்தீர்கள் என்று கேட்டனர். இதனால் கொஞ்சம் முகம் மாறிய ஓபிஎஸ், தம்பி.. திரும்ப திரும்ப அங்கேயே சுற்றி சுற்றி வந்தீங்கன்னா.. அதுக்குள்ளேயே நாங்களும் வருவோம்.. சொல்வதை கேளுங்க... வலியுறுத்த வேண்டியவர்களிடத்தில் வலியுறுத்தினோம். எனக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications