கொடநாடு வழக்கு: மர்மம் விலகுமா? ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி இன்று ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சிபிசிஐடி விசாரணை: இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. முன்பு நடந்த விசாரணையின் போது சிபிசிஐடி போலீஸார் 4 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சிபிசிஐடி போலீஸார் ஊட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கடந்த 13 மாதங்களாக கொடநாடு கொள்ளை கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு கடந்த 13 ஆம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதி அப்துல் காதர் செல்போன் டவரில் இருந்து எஸ்டேட்டுக்கு வந்த போன் எண்களை விசாரித்து வருகிறோம் என்கிறீர்கள். அந்த எண்களை யாருடையது, அங்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது., அதன் ஆய்வு முடிவுகள் எப்போது கிடைக்கும் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஏன் தாமதமானது: அப்போது சிபிசிஐடி கூறுகையில் இந்த செல்போன் எண் தொடர்பான விவரங்களை குஜராத்தில் உள்ள ஆய்கத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர். இந்த செல்போன் எண்கள் பற்றிய தகவல்களை ஜூலை மாதம் குஜராத் ஆய்வு மையத்திற்கு அனுப்பினோம். இதன் முடிவுகள் வந்ததும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கிறோம் என்றும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு கிரீன்வேஸ் சாலைக்குள்பட்ட செல்போன் டவரில் இருந்து 4 எண்கள் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்ததாகவும் அதுகுறித்து ஆய்வுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இந்த ஆய்வு மேற்கொள்ள ஏன் இத்தனை தாமதமானது. இந்த ஆய்வை விரைவாக முடிக்கக் கோரி குஜராத் ஆய்வகத்திற்கு இந்த நீதிமன்றம் ஏன் கடிதம் எழுதக் கூடாது . அதை வலியுறுத்தி நான் கடிதம் எழுதலாமா என நீதிபதி கேட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசியல்வாதிகள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரில் ஆஜராகி விளக்கம்: இந்த நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் ஐயப்பன் என்பவரிடம் இன்று சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெறும் விசாரணையில் ஐயப்பன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். உதகையிடம் உள்ள தனிப்படை போலீசார் ஏற்கனவே ஐயப்பனிடம் விசாரணை நடத்திய நிலையில், 2-வது முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு தான் ஆஜராகி இருப்பதாக ஐயப்பன் கூறினார்.












Click it and Unblock the Notifications