ட்விஸ்ட்.. அந்த 103 பேருக்கு குறி..கோடநாடு வழக்கில் செக் வைத்த போலீஸ்..மொத்தமாக வளைக்கும் 5 தனிப்படை
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மொத்தம் 8 சாட்சியங்களை நீலகிரிக்கு அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 5 தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சயான் உள்ளிட்டவர்களிடம் போலீசார் மேல் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். இந்த கூடுதல் வாக்குமூலங்கள் அடிப்படையிலேயே தற்போது வழக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்த கோடநாடு வழக்கில் மேல் விசாரணை நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துவிட்டது. இதையடுத்து வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

5 தனிப்படை
இந்த வழக்கில் கடந்த வாரம் ஒரு தனிப்படை மட்டுமே அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக மேலும் 4 தனிப்படைகள் கடந்த வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது. மொத்தம் 5 தனிப்படைகளும் வெவ்வேறு கோணத்தில் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகிறது. முக்கியமாக இந்த வழக்கில் கடந்த முறை விசாரிக்கப்படாமல் தவறவிடப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விசாரணை
அதன் ஒரு கட்டமாக தற்போது இந்த வழக்கில் மேலும் 8 சாட்சியங்களை நீலகிரிக்கு அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக 5 தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜீன் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கேரளா
இந்த 8 பேரும் இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்கள் ஆவர். இவர்கள் எல்லோரும் தற்போது பெயிலில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரளாவிலும் சிலர் பார்டரிலும் வசித்து வருகிறார்கள். இதற்கு முன் இவர்களிடம் சில சமயங்களில் விசாரணை நடத்தப்பட்டாலும் பெரிதாக வாக்குமூலங்கள் பெறப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இவர்களிடம் முறையாக வாக்குமூலம் பெற்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தும் திட்டத்தில் அரசு உள்ளது.

வழக்கு
முன்னதாக கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடுத்துள்ள இந்த வழக்கில் விரைவில் முக்கிய உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தீபு, சதீசன் ஆகியோரை போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
கோடநாடு வழக்கில் 103 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் விசாரணை நடத்தப்படவில்லை. இதில் இதுவரை 42 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள். 61 பேரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. இவர்களைத்தான் போலீசார் தற்போது குறி வைத்து உள்ளனர். வரும் நாட்களில் இவர்களிடம் வரிசையாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி
2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் மர்மமான முறையில் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications