லுங்கி யாருடையது.. கொடநாடு விஷயத்தில் ஒரே மர்மம்.. அதிமுகவுக்கு என்ன பயம்?.. செல்வபெருந்தகை கேள்வி
கொடநாடு விவகாரம் குறித்து ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "எந்த லுங்கியில் தூக்கு மாட்டிக் கொண்டாரோ, அது என் அண்ணன் தினேஷ்குமார் லுங்கி இல்லை.. இந்த லுங்கி எங்கிருந்து வந்தது?" என்று கேள்வி தினேஷ்குமாரின் தங்கை கேள்வி எழுப்பினாரே.. இப்போது வரை அதற்கு பதில் இருக்கிறதா? 8 மணிக்கு எதுக்காக ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்? கொடநாடு விவகாரத்தை பார்த்து அதிமுகவினர் பயப்படுவது ஏன்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை சட்டப்பேரவை காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை மீண்டும் தொடங்கியது... துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது... முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற்றது.
இதனிடையே, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தொகை, சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்... இந்த கவனஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சயன்
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை சொன்னதாவது: "காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத சயனை யாரோ ஒருவர் காரில் வந்து மோதுகிறார்.. இப்படிப்பட்ட ராஜேஷ்குமார் நாவலைவிட மர்மங்கள் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.. நான் கேட்கிறேன், நீங்கள் தெய்வமாக வணங்கும், கோயிலாக கருதப்படும் இந்த கொடநாடு எஸ்டேட் சம்பவங்களை எல்லாம் பத்திரிகைகள்தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தற்கொலை
தினேஷ்குமார் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.. அப்போது அவரது தந்தை போஜன், "கடவுள் தந்தார், கடவுள் எடுத்துக் கொண்டார், கடவுள் பார்த்து கொள்வார்" என்று சொன்னார். உடனே தினேஷ்குமாரின் தங்கை, "எந்த லுங்கியில் தூக்கு மாட்டிக் கொண்டாரோ, அது என் அண்ணனுடைய லுங்கி இல்லை.. என் அப்பாவின் லுங்கியும் இல்லை.. என் வீட்டில் இப்படி ஒரு லுங்கியே இல்லை.. இந்த லுங்கி எங்கிருந்து வந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

குற்றப்பத்திரிகை
இந்த கேள்வியை இன்னைக்கு அவர் எழுப்பவில்லை.. அந்த ஆட்சியிலேயே எழுப்பினார்.. இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாதவர்கள், எதற்காக, என்னை பற்றி எனக்கு பதில் சொல்லி கொண்டிருக்கிறார்கள்? இதுதான் நாங்கள் கேட்கும் கேள்வி... இன்னொன்னையும் நான் கேட்கிறேன், எதற்காக சயனும் மனோஜும் 90 நாட்களிலேயே பிணையில் வந்தார்கள்? எதற்காக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை? இந்த கேள்வியையும் நான் கேட்கவில்லை..

ஜெயலலிதா
அதிமுக தொண்டர்களே நேற்று முன்தினம் தொலைபேசியில் என்னிடம் சொல்கிறார்கள்.. "எங்க அம்மாவுக்கு நீதி கிடைப்பதற்கு இந்த ஆட்சியாவது சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டும்" என்பதே அவர்களின் கோரிக்கை.. நான் ஒன்னே ஒன்றுதான் கேட்கிறேன், பிணையில் வந்த மனோஜும், சயனும் புதுடெல்லியில் எதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்? உடனே சென்னையில் இருந்த காவல்துறை எதற்காக டெல்லி விரைந்தது? எதற்காக கைது செய்தது? எதற்காக அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்கள்? இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை.

விவாதம்
ஆனால், நாங்க ஒத்திவைப்பு தீர்மானத்தை, கவன ஈர்ப்பு தீர்மானத்தை விதி எண் 55-ன் கீழ் கொடுக்கிறோம்.. இதை விவாதிக்கணும்.. விவாதிக்க முடியலேன்னா விவாதிக்க முடியலேன்னு சொல்லணும்.. எதற்காக தேவையில்லாததை பேசுகிறார்கள்? எதற்காக பயம்? எதற்காக அச்சம்? தைரியம் இருந்தால், திராணி இருந்தால், நேராக சட்டப்பேரவைக்கு வந்து, காங்கிரஸ் இப்படி கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கிறார், அதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயார் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே?

பேட்டி
அதைவிட்டுட்டு, 8 மணிக்கு பட்டினப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை ஜெயக்குமார் சந்தித்து, தேவையில்லாத கருத்துக்கள் என்று இதை சொல்வதற்கு என்ன காரணம்? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற விதமாக ஜெயக்குமார் ஏன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்? கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றால் எதற்காக அதைப் பற்றி எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப வேண்டும்?

கவன ஈர்ப்பு தீர்மானம்
எதற்காக ஆளுநரை சந்திக்க வேண்டும்... அதிமுகவைப் போல ஆளுநரை சந்திக்கவோ, பதற்றப்படவோ இல்லை. கொடநாடு விவகாரத்தை சட்டப்படி அணுக திராணி இல்லாமல், அதிமுக பதறி அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்ப்பது ஏன்? ஆனால் உண்மை ஒருநாள் வெளியில் வரும். ஜெயலலிதாவுடைய ஆத்மா இருக்கிறது என்றால், இவர்களை உண்மையிலேயே என்ன நடந்தது என்று வெளியே கொண்டு வருவார்.
Recommended Video

தொண்டர்கள்
யாரெல்லாம் ஜெயலலிதாவை நேசிக்கிறார்களோ, அந்த அதிமுக தொண்டர்கள் எல்லாம் இந்த வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும், உண்மையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.. அதனால், இவர்கள் ஏன் பயப்படவேண்டும்? ஒரு வாதத்தை வாதமாக பார்க்க வேண்டும்.. ஒருவேளை சட்டப்பேரவையில் இதை விவாதிக்க அதிமுக தயாரில்லை என்றால், மக்கள் மேடையில் இதை விவாதிக்க காங்கிரஸ் பேரியக்கம் தயாராக இருக்கிறது.. அவர்களை நாங்கள் விவாதத்துக்கு அழைக்கிறோம்..

கொந்தளிப்பு
ஜெயலலிதாவுக்கு இந்த ஆட்சி கண்டிப்பாக நீதி வழங்கும்.. அவருக்கான அந்த உண்மையை வெளிக் கொண்டு வருவோம்.. விசாரணையும் சரியான திசையில் போய் கொண்டிருப்பதாக பத்திரிகைகள் மூலம் அறிகிறோம். ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து மக்கள் அச்சப்படுகிறார்கள், அல்லது கொந்தளிக்கிறார்கள் என்றால் அதை பற்றி விதி எண் 55-ன்கீழ் கொண்டு வரலாம் என்பது விதி.. ஆனால், இவங்க ஏன் அச்சப்படுகிறார்கள் என்பதே என்னுடைய ஒரே கேள்வி" என்றார்.












Click it and Unblock the Notifications