உன் அம்மாவுக்கு இருப்பது தானே அவளுக்கும் இருக்கு.. பெண் டாக்டர் கொலையால் சென்னையில் கொதித்த பெண்
சென்னை: கொல்கத்தாவில் 31 வயது நிரம்பிய பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த போராட்டத்தில் பெண் டாக்டர் ஒருவர் கொந்தளித்து பேசினார்.
மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது நம் நாட்டையை உலுக்கி உள்ளது. அதாவது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு 31 வயது நிரம்பிய பெண் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.

இவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவ படிப்பை படித்ததோடு பயிற்சி டாக்டராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 8 ம் தேதி அவர் நைட் ஷிப்டில் பணியாற்றினார். அதன்பிறகு மறுநாள் காலையில் அவர் அரை நிர்வாணமாக பிணமாக மீட்கப்பட்டார்.
மருத்துவமனையில் கருத்தரங்கக் கூடத்தில் அவரது உடல் கிடைத்தது. உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் சஞ்சய் ராய். முதலில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் கொல்கத்தா பெண் டாக்டர்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க கோரியும், நாடு முழுவதும் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் கண்டன பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். இந்த வேளையில் டாக்டர்கள், ‛‛வேண்டும்.. வேண்டும்.. நீதி வேண்டும். தாமதமான நீதி அநீதியே'' என முழக்கம் எழுப்பினர். அப்போது பெண் டாக்டர்கள் அந்த சம்பவத்தை கண்டித்து பேசினர்.
இந்த வேளையில் இளம்பெண் டாக்டர் ஒருவர் ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர், ‛‛ ஒரு பெண்ணை வெறும் உடம்பாக பார்க்க வேண்டாம். அவளுக்கும் மதிப்பு கொடுங்கள். முதலில் பெண்ணை மனிதராக பாருங்கள். அதனை சரிசெய்தாலே போதும் பெண் என்பவள் பயப்பட வேண்டிய தேவை இருக்காது. பெண்ணின் உடல் அங்கங்கள் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
பெண்ணின் முகத்தை பார்த்து பேசுங்கள். பெண் என்பவள் உடம்பு சார்ந்து பார்க்கக்கூடியவள் இல்லை. உன் அம்மாவுக்கு இருக்கிறது தான் அவளுக்கும் இருக்கு. உன் தங்கைக்கு இருப்பது தான் அவளுக்கும் இருக்கு. அதனால் கேவலமாக பெண்ணை பார்க்கதீர்கள். கேவலமாக நடந்து கொள்ளாதீர்கள்'' என்று கொந்தளித்தார்.
அதன்பிறகு டாக்டர்கள் ஒன் இந்தியாவுக்கு தங்களின் கருத்துகளை பேட்டியாக பதிவு செய்தனர். டாக்டர் மகாராஜன் கூறுகையில், ‛‛இந்த போராட்டத்தின் மூலம் டாக்டரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ் உள்பட மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் நம் நாட்டில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் என்பது இந்தியா முழுமைக்கும் கிடையாது.
ஆந்திராவில் முதலில் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் 2008 ல் கொண்டு வரப்பட்டது. தற்போது 6 மாநிலங்களில் உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். அதன்கீழ் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications