நாடே கொதிக்குது.. கொல்கத்தா பெண் டாக்டர் கேஸ் - மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: மத்திய அரசு
சென்னை: மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி வளாகங்களில், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி- மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவுப் பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 9-ம் தேதி மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, பெண் மருத்துவரின் பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.
நெறிமுறைகள்: இதனிடையே, தேசிய மருத்துவ ஆணைய செயலர் ஸ்ரீனிவாஸ், மருத்துவ கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருக்கிறது.. அதில் உள்ளதாவது:
"மருத்துவ கல்லுாரிகளில், டாக்டர்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் தொடர்கின்றன. டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை, மருத்துவ கல்லுாரி நிர்வாகங்கள் வகுக்க வேண்டும்.
நோயாளிகள்: புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவ துறைகள், விடுதி, கல்லுாரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் செயல் திட்டங்கள் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல் அவசியம்.
போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில், ஆண், பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். மாலை வேளைகளில், மருத்துவ கல்லூரி வளாகங்களில், பாதுகாப்பாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர வழி வகை செய்வது அவசியம்.
விசாரணை: மருத்துவ கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், ஊழியர்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வுகளை, சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுப்பது கட்டாயம். அதுதொடர்பாக போலீசில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். மருத்துவ பணியிட பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications