நயன்தாராவால் வெளிச்சத்துக்கு வந்த வாடகைத்தாய் விவகாரம்! சுகாதாரத்துறை சும்மா இருக்கக்கூடாது -ஈஸ்வரன்
சென்னை: நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியின் வாடகைத்தாய் விவகாரத்தால் தமிழகத்தில் அது குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் வாடகைத்தாய் விவகாரம் ஒரு வித பயத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சுகாதாரத்துறையும், காவல்துறையும் ஆய்வுகளை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
''நயன்தாரா, விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்ட வாடகைத்தாய் விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் பல மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக வாடகைத்தாய்களை பயன்படுத்தி கருத்தரிப்பு புகார்கள் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

வட இந்தியாவில் இருந்து பெண்களுக்கு சம்பளத்தை கொடுத்து மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்து வாடகைத்தாயாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் இருந்துள்ளன .
அப்படி அழைத்து வரும் வட இந்திய பெண்கள் கோழி பண்ணைகளில் அடைத்து வைக்கும் கோழிகளைப் போல ஒரே அறையில் பல பேரை அடைத்து வைத்து பாதுகாப்பதாக சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது. மக்கள் மத்தியில் இந்த வாடகைத்தாய் விவகாரம் ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்காலத்தில் திருமணத்திற்கு மணமகளோ, மணமகனோ தேடும்பொழுது கூட வாடகை தாய்க்கு பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை எழுப்பலாம். அப்படிப்பட்ட விஷயங்கள் வரும் காலத்தில் இளைஞர்கள் இடத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறையும், காவல்துறையும் ஆய்வுகளை மேற்கொண்டு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.''












Click it and Unblock the Notifications