மாணவர்களை கனிவுடன் வரவேற்போம்... ஆசிரியர் பெருமக்களுக்கு கொங்கு ஈஸ்வரன் அட்வைஸ்..!
சென்னை: பல மாதங்களாக வீட்டில் அடைபட்டு கிடந்த மாணவர்கள் நாளை பள்ளிக்கு வரவுள்ள சூழலில், அவர்களை கனிவுடன் வரவேற்க தயாராவோம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்தகால மன அழுத்தங்களை மாணவ, மாணவிகள் மறக்கும் வகையில், நாம் கொடுக்கும் கனிவான வரவேற்பு அமைய வேண்டும் என ஆசிரியர் பெருமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்;

''பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் நாளை வகுப்பறையில் சந்திக்க இருக்கிறீர்கள். மாணவ, மாணவிகள் வீட்டு சிறைகளிலிருந்து சுதந்தரப் பறவைகளாக ஆசிரியர்களையும், நண்பர்களையும் சந்திக்க பள்ளியை நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள்.
நாளை நாம் கனிவோடு கொடுக்கின்ற பிரம்மாண்டமான வரவேற்பில் கடந்த மாதங்களின் அழுத்தங்களை மறந்து பட்டாம்பூச்சி போல பள்ளியில் அவர்கள் சிறகடித்து பறக்கவேண்டும். இனி ஒவ்வொரு நாளும் புதிதாக மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவோம்.
அரசு பள்ளிகள் இனி பெருமையின் அடையாளங்களாக இருக்கும் என்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உணர்த்துவோம். அதே சமயத்தில் கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை கவனத்தில் கொண்டு அரசின் கட்டுப்பாடுகளை இம்மியளவும் பிசகாமல் கடைபிடிப்போம். தயாராவோம் வரவேற்க.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகம் முழுவதும் மாணவர்களை பள்ளிக்கு வரவேற்கும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வகுப்பறைகளையும், பள்ளி வளாகத்தையும் தூய்மை செய்து கட்டிடத்துக்கு வண்ணம் பூசி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனிடையே அனைத்து மாணவர்களும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டியது அவசியம் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பெற்றோர் விரும்பினால் மட்டும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் தீபாவளி பண்டிக்கை முடிந்த பிறகே, அடுத்த வாரம் முதல் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications