கோவை சிலிண்டர் வெடிப்பு.. வெளிநாட்டு சதி.. ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு! தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம்
சென்னை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இது தீவிரவாத நடவடிக்கை என்றும் இதன் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
கோவை மாவட்டம் உக்கடத்தில் அதிகாலை சென்று கொண்டிருந்த காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துள்ளானது. இதில் காரில் இருந்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
வேகத் தடையில் கார் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. கார் வெடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடையாளம் கண்ட போலீஸ்
இந்த நிலையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. சென்னை பதிவு எண் கொண்ட கார் பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகர் என்ற நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷ் முபின் என்பது தெரியவந்தது.

அண்ணாமலை ட்வீட்
இந்த நிலையில் இந்த சிலிண்டர் வெடிப்பின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருக்கலாம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருக்கிறார். அதில், "கோவை சிலிண்டர் வெடிப்பு என்பது வெறும் சிலிண்டர் வெடிப்பு அல்ல. இது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது.

உளவுத்துறை தோல்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து இதை ஒப்புக்கொண்டு தெளிவுபடுத்துவாரா? தமிழ்நாடு அரசு இந்த தகவலை சுமார் 12 மணி நேரமாக மறைத்து வருகிறது. இது தமிழ்நாடு மாநில உளவுத்துறை மற்றும் திமுகவின் தோல்வி இல்லையா? குற்றம்சாட்டப்பட்டவர் தாக்குதலுக்கு திட்டமிட்டபோது உயிரிழந்து இருக்கிறார்.

ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு
இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு உள்ளது. இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு மண்ணில் சில சக்திகள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன. இனியாவது இறக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் எதையும் மறைக்காமல் வெளியில் வந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications