கோயம்பேட்டில் திடீர் மாற்றம்.. சென்னை, மதுரை, கன்னியாகுமரி எல்லா மார்க்கெட்டிலும் ஏறிய பூக்கள் விலை
சென்னை: இன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து சந்தைகளிலும் காய்கறி, பூக்கள், மாலைகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.. எவ்வளவு விலை உயர்த்தி விற்கப்பட்டாலும்கூட, பொதுமக்கள் பூக்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.. அந்தவகையில், சென்னை கோயம்பேடு, கன்னியாகுமரி தோவாளை, மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை நிலவரத்தை பாருங்க.
விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல் தொடர் விடுமுறையும் தற்போது வந்துள்ளதால், கடந்த 2 நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களுக்கான டிமாண்டு எகிறிவிட்டது..

சென்னை கோயம்பேடு
அதிலும் நேற்று மார்க்கெட்டுக்கு நள்ளிரவு 2.30 மணி முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வந்து குவிந்தனர். இதனால் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் பூ மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதிவிட்டது..
ஒரு கிலோ மல்லி 900 ரூபாயிலிருந்து 1,300க்கும் ஐஸ் மல்லி 1000க்கும் ஜாதிமல்லி, முல்லை 750லிருந்து 900க்கும், கனகாம்பரம் 500லிருந்து 2000க்கும், சாமந்தி 200லிருந்து 350க்கும், சம்பங்கி 200லிருந்து 500க்கும், அரளி 200லிருந்து 350க்கும், பன்னீர் ரோஸ் 160லிருந்து 180க்கும், சாக்லேட் ரோஸ் 160லிருந்து 280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது பூக்களின் விலை வழக்கத்தைவிட 3 மடங்கு எகிறிவிட்டது.. இன்றும், நாளையும் முகூர்த்தம் என்பதால் இந்த 2 நாட்களுக்குமே இதே விலைதான் நீடிக்கும் என்று மார்க்கெட் சங்க துணைத் தலைவர் முத்துராஜ் சொல்கிறார்.
கன்னியாகுமரி தோவாளை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான தோவாளை பூ மார்க்கெட்டுக்கு, மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கமாகும்.. அந்தவகையில், பூக்களை வாங்கி செல்வதற்காக கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
வழக்கமாக பூக்களின் வரத்தை வைத்து தான், அதன் விலையும் நிர்ணயம் செய்யப்படும்.. எனினும், முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும்.. அந்தவகையில், இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி, பூக்களின் விலை ஒரேடியாக உயர்ந்து விட்டது.
சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.400-க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ரூ.1,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதைபோல மல்லிகை, அருகம்புல், கேந்தி போன்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல, ஓணம் பண்டிகை விழாவும் ஆரம்பமாகியிருக்கிறது.. இந்த மாவட்டத்துக்கு அருகிலேயே கேரளா உள்ளதால், ஏராளமானோர் பூக்களை வாங்கி செல்கிறார்கள்.
மதுரை மாட்டுத்தாவணி
அதேபோலவே, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகை பூ கிலோ ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ. 2,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications