கோயம்பேட்டில் அரசு புறம்போக்கு நிலம்.. ரூ.1.19 கோடிக்கு உறுதிமொழி பத்திரம்.. சென்னையில் யாரிவர்?
சென்னை: நடிகர் வடிவேலு, ஒரு படத்தில் அரசு பஸ்ஸை வேறொருவருக்கு விற்பதற்கு விலை பேசுவார்.. அத்துடன் "இது உங்கள் சொத்து" என்று பஸ்ஸில் எழுதியிருப்பதையும் காரணம் காட்டுவார்.. அதுபோல, சென்னையில் ஒருவர் ஏமாந்திருக்கிறார்.. இதுகுறித்து போலீசார் உடனடி நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்.. இவருக்கு 50 வயாகிறது.. இவர் கடந்த மாதம் 25ம் தேதி ஆவடி மத்திய குற்றபிரிவில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"நான் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில், சென்னையில் நிலம் வாங்க வேண்டி வானகரம், மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த வாசு (64) என்பவரை அணுகினேன். ஆனால் அவர், எனக்கு நிலம் வாங்குவது பற்றி எந்த முன் அனுபவமும் இல்லாததால், என்னை ஏமாற்ற நினைத்தார்.
50 சென்ட் நிலம்
தனக்கு தெரிந்த பெண்ணை, தன்னுடைய அக்கா என்று சொல்லி, அவரிடம் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி கிராமம், முப்பத்தெட்டு தாங்கல் மெயின் ரோடு, அம்பேத்கர் நகரில் ஒரு சென்ட் ரூ.11,000 என்ற அடிப்படையில் 50 சென்ட் நிலம் உள்ளதாக கூறினார்.
அந்த நிலத்திற்கு ரூ.55,00,000 என நிர்ணயம் செய்து, அதனை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறினார். நானும் அதை நம்பி, வாசு சொன்ன நபருக்கு ரூ.10 லட்சமும், வாசுவுக்கு ரொக்கமாக ரூ.5 லட்சமும் கொடுத்தேன். ஆனால் என்னிடமிருந்து பணத்தைப் பெற்ற வாசு, மேற்படி நிலத்தை எனது பெயரில் போலியான உடன்படிக்கையை போட்டுள்ளார்.
கோயம்பேடு 51 சென்ட் மனை நிலம்
தனது மகன் பிரேம்குமாரை புரோக்கர் என அறிமுகம் செய்து வைத்து ரூ.10.60 லட்சத்தை வாங்கி கொண்டார். பிறகு கோயம்பேட்டில் 51 சென்ட் மனை இருப்பதாகவும், அட்வான்ஸ் தந்த ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, மேற்படி இடத்திற்கு பட்டா வாங்கி விற்றால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என வாசு மறுபடியும் ஆசை வார்த்தை கூறினார்.
இதை நானும் நம்பி, மேற்படி இடத்தின் உரிமையாளர்கள் கிளாடி, கிளாடியின் கணவர் அண்ணாதுரை, பவர் ஏஜெண்ட் ராஜன் ஆகியோருடன் தெய்வமலர் என்பவர் இடைத்தரகராகவும் சேர்ந்து மேற்படி இடத்தின் விலை ரூ.5.75 கோடி என நிர்ணயம் செய்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி ரொக்கமாக முன்பணம் ரூ.10 லட்சத்தை அண்ணாதுரையிடமும், ரூ.10 லட்சத்தை ராஜனிடமும் கொடுத்தேன். இதைத்தவிர தெய்வமலருக்கு ரூ.10 லட்சத்தை ரொக்கமாகவும், ரூ.2 லட்சத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பினேன்.

அரசு புறம்போக்கு நிலம்
மேற்படி இடத்திற்கு பட்டா வாங்க வேண்டி பணம் தேவைப்படுவதாகச் சொல்லி, என்னிடம் ரொக்கமாக ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டார் வாசு.. இப்படி பணத்தை வாசு வாங்கி கொண்டேயிருந்ததால் சந்தேகம் அடைந்து,. இதுகுறித்து நான கேட்டேன். அதற்கு அவர், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவிக்க ரூ.50 லட்சம் தருவதாக கூறி உறுதிமொழி பத்திரம் போட்டு, அதற்கு ரூ.50 லட்சத்தை ரொக்கமாக பெற்றுக் கொண்டார்.
அதற்கு பிறகுதான், கோயம்பேட்டிலுள்ள மேற்படி இடத்தை விற்க முற்படும்போது, அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும், அதற்கு பட்டா வாங்க முடியாது என்பதும் எனக்கு தெரிய வந்தது. அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இதில், வாசு மற்றும் அவர் சொன்ன நபர்களுக்கு மொத்தம் ரூ.1.19 கோடி கொடுத்துள்ளேன். என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கமிஷனர் உத்தரவு
இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு, ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவு பிறப்பித்தார்.. இதையடுத்து, இதற்கெனவே தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியில், தலைமறைவாக இருந்த வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த வாசு (64), அவரது மகன் பிரேம்குமார் (38), நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை (55) மற்றும் கொரட்டூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தெய்வமலர் (47) ஆகியோரை போலீசார் கைது செய்து, புழல் ஜெயிலில் அடைத்து, மற்றவர்களையும் தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications