மே 10 வரை மொத்த விற்பனை கிடையாது.. திருமழிசையில் நடைமுறை சிக்கல் இருக்கு..கோயம்பேடு வியாபாரிகள்
சென்னை: மே 10ஆம் தேதி வரை கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த காய்கறி விற்பனை கிடையாது என அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கோயம்பேடு மூலம் கொரோனா தொற்றால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக மூட அரசு முடிவு செய்தது. எனவே இன்று முதல் திருமழிசையில் சந்தை இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்தது.
ஆனால் இந்த முடிவுக்கு அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோயம்பேட்டிலிருந்து திருமழிசைக்கு மாறுமாறு அரசு தெரிவித்துள்ளது.

அத்தனை பொருட்கள்
எங்களுக்கு காலஅவகாசம் ஏதும் கொடுக்காமல் உடனடியாக மூடவேண்டும் என்றால் எப்படி மூட முடியும். ஒரே நாளில் எப்படி அத்தனை பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியும். எங்களுக்கு அரசு கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். திருமழிசைக்கு செல்வதில் எங்களுக்கு செல்ல ஆட்சேபனை இல்லை. ஆனால் அங்கு அடிப்படை வசதிகள் உள்ளனவா என தெரிய வேண்டும்.

உரிமையாளர்கள்
கோயம்பேட்டில் உள்ள கடைகளுக்கு தினமும் 450 லாரிகளும் 2000-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களும் வரும். அவை நிறுத்துவதற்கான போதுமான இடவசதிகள் திருமழிசையில் உள்ளனவா? தொழிலாளர்களுக்கு தங்கும் இடம், கழிப்பறை வசதிகள், வாடிக்கையாளர்கள், சில்லறை வியாபாரிகளின் வாகனங்களை நிறுத்த இடம், உரிமையாளர்களுக்கான வாகன நிறுத்தும் இடம் ஆகியவை உள்ளனவா?

காய்கறி சந்தை
ஒரே நாளில் கடையை மாற்றுவதற்கு நாங்கள் செய்யும் வியாபாரம் அரை கிலோ, ஒரு கிலோ வியாபாரம் அல்ல. டன் கணக்கில் புழங்கும் வியாபாரம். இன்று முதல் நாங்கள் அரசுக்கு 5 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கிறோம். மே 10-ஆம் தேதி வரை காய்கறி சந்தையில் மொத்த விற்பனை கிடையாது.

திருமழிசை
இந்த 5 நாட்களுக்கு எந்த சரக்கு லாரிகளும் திருமழிசைக்கு வராது, நாங்கள் எங்கள் பொருட்களை திருமழிசைக்கு கொண்டு செல்லவும் மாட்டோம். இந்த நாட்களில் அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி திருமழிசைக்கு ஆய்வுக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு போதுமான வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அங்கு செல்ல முடியும்.

கொரோனா
கடந்த 3 மாதங்களாகவே எங்கள் கடைகளை மூடுமாறு பலர் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் நாங்களோ மக்களின் நலனுக்காக கடைகளை மூடாமல் உள்ளோம். ஒரு நாள் கடையை மூடிவிட்டால் சரக்கு தட்டுப்பாடு ஏற்படும். பொருட்களின் விலையும் கிலோ 100, 200 என விற்பனையாகும். அதனால் எங்கள் குடும்பத்தார் வலியுறுத்தியும் கடைகளை மூடாமல் அரசு வழிகாட்டுதலின்பேரில் செயல்பட்டு வருகிறோம். ஆனால் கோயம்பேடு வியாபாரிகள்தான் கொரோனாவை பரப்பியதாக கூறுகிறார்கள். எங்கள் வியாபாரிகளுக்கும் கொரோனா வந்துள்ளது. அனைவருக்கும் குழந்தைகள், பிள்ளைகள், மனைவி, குடும்பம் என உள்ள நிலையில் வியாபாரிகள் எப்படி கொரோனாவை பரப்புவர்? என்றார்.












Click it and Unblock the Notifications