சத்தமே இல்லாமல் தட்டித் தூக்கிய எடப்பாடி..! அதிமுகவில் இணைந்த கிருஷ்ணகிரி முக்கிய புள்ளிகள்!
சென்னை: கிருஷ்ணகிரியில் செல்வாக்கு மிக்க திமுக புள்ளிகளாக இருந்தவர்களை சத்தமில்லாமல் தூக்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், முன்னாள் திமுக நகர செயலாளர் நவாப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்து பரிதா நவாப் பொறுப்பு வகித்து வந்தார். நகர்மன்றத் துணைத் தலைவராக திமுகவின் சாவித்ரி கடலரசு மூர்த்தி பதவி வகித்தார். கிருஷ்ணகிரி நகராட்சியைப் பொறுத்தவரை திமுகவுக்கு 25 கவுன்சிலர்களும், அதிமுகவுக்கு 6 கவுன்சிலர்களும் உள்ளனர். மேலும் பாஜக, காங்கிரஸ் தரப்பில் தலா ஒருவர் என மொத்தமாக 33 பேர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திமுக கவுன்சிலர்கள் 23 பேர் நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிருப்தியில் இருந்த திமுக கவுன்சிலர்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்ய முயன்று தோல்வியில் முடிந்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் முன்னிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 27 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் நகராட்சி பெண் தலைவரின் பதவி பறிபோனது. நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவினரே முதுகில் குத்தியதால் கோபமடைந்த கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், மற்றும் முன்னாள் நகர கழக செயலாளர் நவாப் ஆகியோர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினரே அவரை தோற்கடித்ததால், கடும் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், பரிதா நவாப் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

முன்னாள் நகர்மன்றத் தலைவர் பரிதா நவாபும், அவரது கணவரான முன்னாள் நகர கழக செயலாளர் நவாபும் திமுகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி ஏற்பாட்டில் திமுகவினர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி திமுகவில் மக்களிடையே செல்வாக்காக இருந்து வந்த நவாப் குடும்பத்தினர் அதிமுகவில் இணைந்தது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுக பக்கம் தாவி வந்த நிலையில், திமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications