இதைவிட ஒரு அநீதி தமிழகத்திற்கு உண்டா? மத்திய பாஜக அரசை வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி!
சென்னை: பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு காட்டுவதில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. அரசால் இதைவிட ஒரு அநீதியை தமிழகத்திற்கு இழைக்க முடியாது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

பீகார் மாநிலத்தில் தொடங்கி, குஜராத் மாநிலம் அகமதாபாத் வரை நிறைவு பெற்றுள்ள 2079 கி.மீ. தனி சரக்கு ரயில் பாதையை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்க இருக்கிறார். சரக்கு போக்குவரத்திற்காக உத்திரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் வழியாக 3381 கி.மீ. தனி சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை 2014 இல் ஆட்சிக்கு வந்ததும் ஒன்றிய பா.ஜ.க. அரசு துவங்கியது.
அதில், நிறைவு பெற்றுள்ள 2079 கி.மீ. தனி ரயில் பாதையை உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் நாளை நடைபெறும் விழாவில் வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் சரக்கு ரயில்களுக்கான தனி பாதை அமைக்கும் பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கான எந்த ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ இதுவரை செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் 2006-07 ல் தொடங்கப்பட்டு, ரூபாய் 11,400 கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டில் ரூபாய் 211 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் ரூபாய் 1000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகாலமாக இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் முடங்கி கிடக்கிறது.
ஒன்றிய பா.ஜ.க. அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை - மகாபலிபுரம் - கடலூர், திண்டிவனம் - செஞ்சி - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, தூத்துக்குடி - அருப்புக்கோட்டை - மதுரை ஆகிய ரயில் திட்டங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக எந்தவிதமான ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதைவிட ஒரு அநீதியை பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு இழைக்க முடியாது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 9.22 சதவிகிதம். இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 6 சதவிகிதம் தமிழகத்திலிருந்து கிடைக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு விநியோகிக்கப்படுவது 1.21 சதவிகிதம் தான். அதாவது, தமிழகம் வரியாக வழங்குவது ஆண்டுக்கு ரூபாய் 1.6 லட்சம் கோடி. அதில் தமிழகத்திற்கு விநியோகிக்கப்படுவது ரூபாய் 41,000 கோடி மட்டுமே. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இத்தகைய பாகுபாட்டை, அநீதியை பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் மூலமாக தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் கூறியிருக்கிறார். ஆனால், அதே காலகட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்திற்கு வழங்கிய ரூபாய் 10 லட்சத்து 73 ஆயிரம் கோடியை லாவகமாக மறைத்திருக்கிறார். தமிழகம் தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசால் பலமுனைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழகத்திற்கு காட்டுவதில்லை. இதற்கு நாளை துவங்க இருக்கிற தனி சரக்கு ரயில் பாதை திட்டமே தகுந்த சான்றாகும். இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலிமை பெற்று, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications