கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர்! குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது! முதல்வர் வழங்கினார்
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு (91) தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவித்தார். அந்த விருதுடன் ரூ 10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
78 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார்.

இதையடுத்து அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அவர் தனது உரையில் கூறியிருப்பதாவது: பரந்தூர் விமான நிலையம், குலசேகரப்பட்டினம் விண்வெளி தொழிற்பூங்கா உள்ளிட்ட உருவாக்கப்பட இருக்கும் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டார். மேலும் அவர் தொடர்கையில் இயற்கை பேரிடர் பாதிப்புகள் தொடர்பாக நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், ஏலகிரி உள்ளிட்ட மலைகளில் முறையாக ஆய்வு செய்யப்படும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழித்தோன்றல் மட்டுமல்ல. வழிவழி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் அளித்து வரும் வெற்றிக்கு தலைவணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவோம்.
தியாகிகள் ஓய்வூதியம் 21,000 ஆக உயர்த்தப்படும்.
தியாகிகள் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ரூ11,500 ஆக உயர்த்தப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர் குடும்பங்களின் சிறப்பு ஓய்வுதியம் ரூ10,500 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். பின்னர் விருதுகளை வழங்கினார்.
அதில் தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பாராட்டுச் சான்றிதழும், ரூ 10 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக நாற்காலியில் உட்கார்ந்தபடியே இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான குமரி அனந்தனுக்கு அறிவிக்கப்பட்டு அவருக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 1ஆம் தேத தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.
இந்த விருதை கடந்த 3 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர். நல்லக்கண்ணு, கி. வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கு நடப்பாண்டு விருதாளரை தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் கடந்த 1ஆம் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும், இலக்கிய செல்வராகவும் இலக்கய கடலாகவும் எவரோடு பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் குமரி அனந்தனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications