பட்டின பிரவேச நிகழ்ச்சி.. முதல்வர் உறுதி அளித்தார்.. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேட்டி
சென்னை: பட்டின பிரவேச நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற முதல்வர் உறுதி அளித்துள்ளார் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி எனப்படும் பல்லக்கில் தூக்கும் நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் குவிந்தன.
மனிதனை மனிதனே தூக்கும் செயல் தவறானது என்று ஒரு சாராரும், இது குருவுக்கு சிஷ்யர்கள் செய்யும் சைவம் சார்ந்த சடங்கு என்று மறு சாராரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி
மே 22 ஆம் தேதி பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்றுடன் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை ஆதீனங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்றைய தினம் சந்தித்து பேசியிருந்தனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்திப்பு
இந்த சந்திப்புக்கு பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி இந்த ஆண்டு சுமூகமாக நடைபெற வேண்டுகோள் விடுத்தோம். ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இருக்கும் வகையில் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

பிரச்சினை
வருங்காலங்களில் இதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் மனிதநேயத்துக்கு குந்தகம் ஏற்படாமல் எப்படி சுமூகமாக தீர்வு காணலாம் என்பதை ஆதீனங்கள் கலந்து பேசி நல்ல தீர்வை காண்போம். இந்த ஆண்டு மரபுப்படி அனைத்தும் நிறைவேற வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதாக முதலமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

மரபு
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி என்பது ஒரு மரபு மற்றும் பாரம்பரிய ஆன்மீக அடித்தளத்தில் நடைபெறுகிற ஒரு நிகழ்வு. இதுவரை எந்தவித தடையும் இல்லாமல் நடைபெற்றுள்ளது. தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சி என்பது சமயம் தொடர்பான நிகழ்வு. இதில் அரசியல் செய்ய தேவையில்லை. பிற குறுக்கீடு, தலையீடு தேவையில்லை.

ஒத்துழைப்பு
வழக்கம்போல் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் உறுதி உளித்துள்ளார். முதலமைச்சரும் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார். அரசு, மடம், ஆதீனம் ஆகியவை ஒருங்கிணைந்து இந்த ஆண்டு வழக்கம்போல் இந்த விழா சிறப்பாக நடைபெறும் என நம்புகிறோம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications