உதயநிதி ஸ்டாலினுக்கு குறிஞ்சி இல்லம்! சபாநாயகர் அப்பாவுவுக்கு மலரகம் இல்லம்! ஜரூராக நடக்கும் வேலை!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் குறிஞ்சி இல்லம் அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது குறிஞ்சி இல்லத்தில் சபாநாயகர் அப்பவு குடியிருந்து வரும் நிலையில், அவர் அதற்கு அருகில் உள்ள மலரகம் இல்லத்துக்கு குடிபெயரவுள்ளார்.
இதனால் இந்த 2 பங்களாக்களையும் சீரமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்கு பங்களா
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அவருக்கு அரசு சார்பில் பங்களா ஒதுக்குவதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மலரகம் இல்லத்தில் குடியிருந்து வந்த நீதிபதி ஒருவர், தாம் ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பங்களாவை காலி செய்திருக்கிறார்.

மலரகம் பங்களா
இதையடுத்து மலரகம் பங்களாவில் ஆய்வு நடத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கார் பார்க்கிங் வசதிக்கு போதி இடம் இல்லாததால் இது குறித்து அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தெரிவித்திருக்கின்றனர்.மேலும், காம்பவுண்ட் சுவரை அகலப்படுத்துவது பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். இந்த தகவலை அறிந்தவுடன் நேரடியாக ஆய்வு நடத்திய அமைச்சர் எ.வ.வேலு, அதிகாரிகளின் யோசனையை ஏற்று மலரகம் இல்லத்துக்கான சுற்றுச்சுவரை மாற்றியமைக்க முன் வந்துள்ளார்.

குறிஞ்சி இல்லம்
இதனிடையே மலரகம் இல்லத்தின் பக்கத்து பங்களாவான குறிஞ்சி இல்லத்தில் குடியிருந்து வரும் சபாநாயகர் அப்பாவு, இது குறித்து அறிந்தவுடன் உதயநிதிக்கு தமது வீட்டை கொடுப்பதாகவும் தனக்கு சிறிய பங்களாவான மலரகம் போதும் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், தாம் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் தொகுதியில் தான் இருப்பதாகவும் சபை நடக்கும் போது மட்டுமே சென்னையில் இருப்பதாகவும் தனக்கு இவ்வளவு பெரிய பங்களா வேண்டாம் எனவும் சபாநாயகர் அப்பாவு எடுத்துக் கூறியிருக்கிறார்.

சபாநாயகர் அப்பாவு
இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் சபாநாயகர் அப்பாவுவுக்காக மலரகம் இல்லத்தை தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலரகம் பங்களாவுக்கு சபாநாயகர் அப்பாவு குடிபெயர்ந்தவுடன் அவர் வசித்து வந்த குறிஞ்சி இல்லத்துக்கு அமைச்சர் உதயநிதி குடிபெயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி இல்லத்தை பொறுத்தவரை விசாலமான கார் பார்க்கிங் வசதி கொண்டது.

உதயநிதி ஸ்டாலின்
அதுமட்டுமல்லாமல் எத்தனை பேர் வந்தாலும் கூட்ட நெரிசலின்றி போக்குவரத்துக்கு இடையூறின்றி விசிட்டர்களை அமைச்சர் உதயநிதியால் பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தின் போது அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு அரசு சார்பில் குறிஞ்சி இல்லம் ஒதுக்கப்பட்டிருந்தது திரும்பிப் பார்க்கத் தக்கது.












Click it and Unblock the Notifications