Exclusive: அதிமுக பாமக கூட்டணி எப்படி.. ரொம்ப கேவலமா இருக்கு.. குஷ்பு பொளேர்!
சென்னை: அதிமுக பாமக கூட்டணி கேவலமான கூட்டணி என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
அதிமுக பாமக பாஜக இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்புவிடம் தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்து ஒன்இந்தியா தமிழ் சார்பில் கேட்கப்பட்டது.

கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும்...
கேள்வி: அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: கேவலமாண கூட்டணி.. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம், உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. மத்திய பாஜக அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். இன்று அவரும் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார். தமிழக மக்களின் எதிர்காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.
கேள்வி: திமுக காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறியிருக்கிறீர்கள், 40 தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?
பதில்: நம்பிக்கை இல்லாமல் இல்லை. 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி தான் கைப்பற்றும். 35 தொகுதி என எதற்கு கூறினேன் என்றால், சரி 4 பேராவது எதிர்தரப்பில் வெற்றிபெற்று மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை பார்க்கட்டுமே என்று தான்..(சிரிப்பு) எதிர்தரப்பே இருக்கக்கூடாது என நினைக்கூடாது அல்லவா.
கேள்வி: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடு எப்படி உள்ளது?
பதில்: கே.எஸ்.அழகிரி அருமையாக செயல்படுகிறார். அனைத்து தொண்டர்களையும் சந்திக்கிறார், நிர்வாகிகளை அரவணைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக்கொடுத்து செல்கிறார். இன்னும் சொல்லப்போனால், நீண்ட நாட்களாக கே.எஸ்.அழகிரி போல் ஒரு தலைவர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வர வேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
கேள்வி: தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் குஷ்பூவை அதிகம் பார்க்க முடியவில்லையே?
பதில்: ஒன்றை புரிந்துகொள்ளுங்கள், நான் இப்போதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு தான் வருகிறேன். தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள். பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை காணலாம்.
கேள்வி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஷ்பூ மத்திய அமைச்சர் ஆக வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: (சிரிப்பு) யாருக்கு தெரியும்,தேர்தலில் போட்டியிடுவேனா என்பதே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும்.யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றி ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார்.












Click it and Unblock the Notifications