ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டேனா.. மறுக்கும் தேமுதிக சுதீஷ்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை என சுதீஷ் தகவல்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளன.
தொடரும் ஆளுநர் - அரசு மோதல்! புதிய கல்விக்கொள்கையே “பெஸ்டு”.. எதிர்ப்பவர்களை விமர்சித்த ஆர்என் ரவி
அதிமுக கூட்டணி சார்பில் அதிமுகவே போட்டியிடுகிறது. ஆனால் யார் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காரணம் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு பின்னர் வேட்பாளரை அறிவிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி
இந்த நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக திடீரென 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டில் சமரசம் ஏற்படாததால் திடீரென கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து அக்கட்சி அமமுகவுடன் கூட்டணி அமைத்து 65 இடங்களில் போட்டியிட்டது. இதில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்டு டெபாசிட்டை இழக்கும் அளவுக்கு தோல்வியை அக்கட்சி சந்தித்தது.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலிலும் அந்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதனிடையே அவ்வப்போது தமிழக அரசுக்கு ஆதரவாகவே தேமுதிக மூத்த தலைவர்கள் கருத்து கூறி வந்ததால் வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்துவிடவே இந்த தேர்தலில் தனித்து போட்டி என தேமுதிக அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி
அந்த வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளராக ஆனந்த் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அவரை சந்திப்பதற்காக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் நேரம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
தேமுதிக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் எதற்காக இந்த சந்திப்பு என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஒரு வேளை தேமுதிக வேட்பாளர் அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு அளிக்க தேமுதிக முன் வந்துவிட்டதாகவும் கூறப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதீஷ் மறுப்பு
இந்த நிலையில் இந்த தகவலை எல்.கே. சுதீஷ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மை அல்ல. தவறான செய்திகளை பரப்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பிப்ரவரி 1ஆம் தேதி எனது தலைமையில் ஈரோடு தேமுதிக வேட்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது என சுதீஷ் குறிப்பிட்டுள்ளார்.