குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்! மத்திய அரசின் திட்டத்துக்கு கனிமொழி ஸ்டிக்கர்! பாஜக சாடல்!
சென்னை: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு, கனிமொழி ஸ்டிக்கர் ஒட்டப் பார்ப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக எல்.முருகன் கூறியிருப்பதாவது;
''தமிழகம் வந்த பிரதமர் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, ரோகிணி 6 H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமைமிகு தருணம்.

ஆனால் இது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டம் எனவும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி வகித்தபோது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கொண்டு வருவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதாகவும் கூறி திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டப் பார்க்கிறார்.
இந்தியாவின் முதல் ராக்கெட் தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது தமிழகத்தில் தான். மூத்த விண்வெளி ஆய்வு விஞ்ஞானி நம்பி நாராயணன் எழுதிய "ரெடி டு ஃபயர்" என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை திருமதி கனிமொழிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழகத்தில் இடம் கேட்டு வந்த முதுபெரும் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி விக்ரம்சாராபாயை அப்போதைய திமுக அமைச்சர் மதியழன் எப்படி அவமானப்படுத்தினார் என்பது தெரிய வரும். அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் உடல்நலம் சரியில்லாத நிலையில் திமுகவினர் இஸ்ரோ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காதது மட்டுமல்லாமல் விக்ரம்சாராபாயை அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் நாடறிந்த ஒன்று.
ஸ்டிக்கர் ஒட்டுவதை கூட சரியாக செய்ய தெரியாமல் சீனக் கொடி பொருந்திய ராக்கெட் படத்துடன் விளம்பரம் வெளியிடுகிறார்கள் திமுகவினர். தேச பக்தி என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் திமுகவினரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். பாரத நாட்டின் மீதும் இஸ்ரோவின் சாதனைகளை விடவும் இவர்களுக்கு சீனா மீது பாசம் பொங்குவதில் வியப்பில்லை.
திமுகவினர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தபோது திருமதி கனிமொழி முயற்சி எடுத்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வந்திருக்கலாமே. ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்காவே மத்திய அரசில் அமைச்சர்களாக பவனி வந்தவர்களுக்கு தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வருவதில் எப்படி அக்கறை இருக்கும்?
ஆனால் தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் இஸ்ரோவின் திட்டங்களை செயல்படுத்த சரியாக இருக்கும் என கனவு கண்ட இந்திய விண்வெளி ஆய்வு திட்டங்களின் நாயகர்களான சதீஷ் தவான் மற்றும் விக்ரம் சாராபாயின் கனவுகளை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார்.''












Click it and Unblock the Notifications