கவனிச்சீங்களா? காக்கி பேண்ட்.. வெள்ளை சட்டை! சீருடையுடன் ஆர்எஸ்எஸ் பேரணியில் எல்.முருகன், எச்.ராஜா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி நடைபெற்ற நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கொரட்டூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியிலும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோவையில் நடைபெற்ற பேரணியில் சீருடை அணிந்து கலந்துகொண்டார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பேரணி நடத்த முடிவு செய்தது. தமிழ்நாடு காவல்துறை இதற்கு அனுமதி வழங்கவில்லை.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். வழக்கு தொடர்ந்தது. அதில், தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி வழங்ககோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி ஊர்வலத்துக்கு அனுமதி தர தமிழ்நாடு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊர்வலத்துக்குஅனுமதி அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ள கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் நவம்பர் 6 ஆம் தேதி உள் அரங்கில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வழங்கியது.
ஆனால், உள் அரங்கில் பேரணி நடத்தும் உத்தரவு ஏற்புடையது அல்ல என்று கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணியை ரத்து செய்வதாக அறிவித்துஹ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவது 45 இடங்களில் பேரணி நடத்தியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.
தனி நபர்கள் குறித்தோ, சாதி-மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் கருத்து கூற கூடாது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசக்கூடாது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்தவித செயல்களையும் செய்யக்கூடாது. பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்.

காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்களை கைகளில் ஏந்தி செல்ல கூடாது. குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்து ஊர்வலகத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும். மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அதன் தொண்டர்கள் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு தொப்பி அணிந்து கலந்துகொண்டனர். சென்னை கொரட்டூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சீருடை அணிந்து கலந்துகொண்டார். அதேபோல், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோவையில் நடைபெற்ற பேரணியில் சீருடை அணிந்து பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications