கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படம்... தமிழக அரசுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள்..!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் பாஜக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அரசியல் ரீதியாக எல்.முருகன் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாஜகத்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.. எல் முருகன் கருத்து சரியா?
தேர்தல் பணி
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய எல்.முருகன், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டணிக் கட்சி
எல்.முருகன் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிராம அளவில் மத்திய அரசின் செயல்பாடுகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் நடவடிக்கைக்கு அச்சாரமாக இந்த கோரிக்கை பார்க்கப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் தான் கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறும். இங்கு கூட்டணிக் கட்சியின் ஆட்சி என்ற அடிப்படையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி நிர்வாகிகள்
பாஜக தலைவர் எல்.முருகன் விடுத்துள்ள இந்தக் கோரிக்கையை அதிமுக அரசு ஏற்குமா என்பது பற்றிய எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றிபெறும் என முருகன் மிகுந்த நம்பிக்கை தெரிவித்தார். சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் சசிகலா புஷ்பா, உள்ளிட்ட பல முன்னணியினர் கலந்துகொண்டனர்.
பாஜகவில் இணைப்பு
இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மன் சிவராமகிருஷ்ணன் மற்றும் மறைந்த இயக்குநர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கான உறுப்பினர் அட்டையை பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி வழங்கினார்.