விஜய்யின் பிரசாரத்தால்.. சென்னையில் தவெகவினர் செய்த செயல்.. தொழிலாளியின் சைக்கிளுக்கு நேர்ந்த கதி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் இன்று பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அங்கு குவிந்த தவெகவினர், விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த தொழிலாளியின் சைக்கிளை சேதப்படுத்தி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற உள்ளது.

முன்னதாக பிரசாரத்துக்கு கடைசி நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிரமாக பிரசாரம் செய்தனர். முதல்வர் ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியிலும், சீமான் தான் களமிறங்கும் காரைக்குடி தொகுதியிலும் பிரசாரம் செய்தார்.
சென்னையில் விஜய் பிரசாரம்
அதேபோல் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூரில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு சைதாப்பேட்டையில் விஜய் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் விஜய்யை பார்க்க ஏராளமானவர்கள் கூடினர். அந்த வகையில் விஜய் பிரசாரம் நடந்த இடத்தில் கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சைக்கிள் சேதமடைந்தது
அப்போது அந்த வழியாக சென்ற தொழிலாளி ஒருவர் தனது சைக்கிளை போலீஸ் பூத் அருகே நிறுத்திவிட்டு சென்றார். திரும்ப அந்த தொழிலாளி வந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சைக்கிள் நகரவில்லை.
அப்போது தான் சைக்கிள் சேதமாகி இருப்பது தெரியவந்தது. தொழிலாளி சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றபோது தவெகவினர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் அவரது சைக்கிள் மீது ஏறியுள்ளனர். இதில் கீழே விழுந்த சைக்கிள் சேதமடைந்துள்ளது.
வருத்தப்பட்ட தொழிலாளி
இதுபற்றி அந்த தொழிலாளி கூறுகையில், ''டிராபிக் அதிகமாக இருக்கு என்று சைக்கிளை போலீஸ் பூத் அருகே விட்டு சென்றேன். ஆனால் அவர்கள் (தவெகவினர்) போலீஸ் பூத் மேல் ஏறி உடைத்துவிட்டனர். என்னுடைய சைக்கிளையும் உடைத்துவிட்டனர். சைக்கிளில் ரிம் போய்விட்டது. சக்கரம் சுற்றவில்லை.
பணம் இல்லாதவங்ககிட்ட இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இங்கே ஸ்பேனர் கிடைத்ததால் நான் சைக்கிளை சரிசெய்கிறேன். யாராவது அப்பாவியாக இருந்தால் என்ன செய்வது? சைக்கிளை இங்கே விட்டுவிட்டு செல்வார்.. அதனை ஒருவர் திருடி சென்று இரும்பு கடையில் போடுவார்'' என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.
கட்டுப்படாத தவெகவினர்
தவெகவினரை எடுத்து கொண்டால் பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்களாகவே உள்ளனர். விஜய்யை பார்க்கும் ஆர்வ மிகுதியில் ஆபத்தை உணராமல் சில விஷயங்களை உணர்ச்சிவசப்பட்டு செய்து வருகின்றனர். மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றியில் ஏறி விஜயை பார்ப்பது, விஜய்யின் பிரசார வாகனத்தை துரத்தி செல்வது என்று பலவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக தவெக தலைமை பலமுறை அறிவுறுத்தியும் கூட அவர்கள் அதனை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் தொழிலாளியின் சைக்கிள் மீது ஏறி அதனை உடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications