சென்னையில் மனைவி பெயரில் நிலம். சர்வே எண் உட்பிரிவு ஒரே தவறு.. 55 லட்சம் மொத்தமாக காலி
சென்னை : பத்திரப்பதிவு ( land survey number) செய்யும் போது சரி, சர்வே எண் வாங்கும் போது, பட்டா வாங்கும் போது சரி, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் பத்திரப்பதிவில் செய்த தவறுகளை மறைத்து மோசடி செய்ய பார்ப்பார்கள். அதாவது உட்பிரிவு செய்யும் போது தவறுகள் ஏற்பட்டிருக்கும். இந்த தவறு தெரியாமல் வாங்கியவர்கள், பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும். அப்படித்தான் போலி ஆவணம் மூலம் 55 லட்சத்தை வாங்கி நிலத்தை விற்று மோசடி செய்ததாக பாபு என்பவர் கைதாகி உள்ளார்.
சொத்து ஆவணங்களை நகல் எடுக்க சென்றால் முடிந்தவரை ஜெராக்ஸ்களை அல்ல ஓரிஜினலை எடுத்து நகல் எடுத்து தர சொல்லி கையோடு வாங்கி கொள்ளுங்கள். உங்கள் ஆவணங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பாதீர்கள்.அப்படி அனுப்பி ஜெராக்ஸ் எடுத்து கையோடு டெலிட் செய்துவிடுங்கள். ஏனெனில் சில இடங்களில் ஆவணங்களை வைத்து மோசடி செய்வது நடக்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜெராக்ஸ் கடை வைத்திருந்த பெண் ஒருவர் போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்ததாக கைதாகி உள்ளார்.

அதேபோல் சிலர் பத்திரங்களை பதிவு செய்யும் போது, தவறான ஆவணங்களை கொடுத்து, சர்வே எண் உட்பிரிவில் மோசடி செய்வதும் நடக்கிறது. அதாவது பத்திரப்பதிவில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்று நம்பிவிடாதீர்கள், சேல் அக்ரிமெண்டில் பிழை ஏற்பட்டிருக்கும். அந்த பிழையை சாதகமாக்கி தவறாக பத்திரப்பதிவு செய்வது நடக்கிறது. அப்படிப்பட்ட பதிவினால் ஒருவர் 55 லட்சத்தை ஏமாந்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவு 6-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் சுவாமிநாதன் என்பவர் கொளத்தூர் கண்ணதாசன் நகர் பகுதியில் 1,200 சதுரடி நிலத்தை சூளைமேடு, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த பாபு (62) என்பவரிடம் 2018-ம் ஆண்டு ரூ.55 லட்சத்துக்கு வாங்கி, மனைவி கவிதா பெயரில் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்.
இந்த இடத்துக்கு சுவாமிநாதன் பட்டா வாங்க முயன்றபோது, அந்த இடத்துக்கு சர்வே எண் உட்பிரிவு செய்ததில் பிழை ஏற்பட்டதை மறைத்து ஏமாற்றி பாபு பத்திரம் செய்து கொடுத்தது தெரியவந்தது. இந்த மோசடி சம்பவம் குறித்து சுவாமிநாதன் 2020-ம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் மத்திய நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ரூ.55 லட்சம் பெற்று பாபு மோசடியில் ஈடுபட்டது உண்மை என்பது உறுதியானது. இந்த வழக்கில் சுவாமிநாதனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications