அம்பத்தூரில் வீடு கட்ட 52 லட்சத்தில் வாங்கிய நிலம்.. 8 வருடம் பின்பு கோயம்பேடு சுதாகருக்கு ட்விஸ்ட்
சென்னை : சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனக்கு ஒரு காலிமனை வாங்கி விரும்பினார். அதற்காக தேடி கொண்டிருந்த சுதாகரிடம் அம்பத்தூர் அருகே 2,215 சதுர அடி நிலம் குறைந்த விலையில் இருப்பதாக இரண்டு பேர் கூறியுள்ளார்கள். இதனை நம்பி கடந்த 2018ம் ஆண்டு 52 லட்சத்திற்கு சுதாகர் வாங்கினார். இந்நிலையில் சர்வேயரை வைத்து அளக்க சென்ற போது, நிலம் உங்களுடையது இல்லை என்று வருவாய்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது தான் ரூ.52 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்று மோசடி செய்தது சுதகாருக்கு தெரியவந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 40 வயதாகும் சுதாகர் (40) என்பவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். தனக்கென சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்ற பல இடங்களில் சென்று பார்த்து வந்துள்ளார். அப்படி இடம் தேடிய போத அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியில் 2,215 சதுர அடி நிலம் இருப்பதாக ராமலிங்கம் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறியதை நம்பிய சுதாகரிடம், அந்த நிலத்தை தர்மராஜ் மற்றும் ராமலிங்கம் ஆகிய இருவரும் இணைந்து, ராமலிங்கத்தின் மனைவி தேவி என்பவர் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு அந்த இடத்தை ரூ.52 லட்சத்திற்கு சுதாகருக்கு விற்பனை செய்துள்ளனர்.

நிலத்தை வாங்கிய பிறகு, அதனை முறைப்படி அளவீடு செய்வதற்காக சுதாகர் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த நிலத்தை ஆய்வு செய்த வருவாய் அதிகாரிகள், இந்த நிலம் உங்களுக்குச் சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளனர். அத்துடன் நீங்கள் வாங்கியதாக கூறும் நிலம் இது வேறொருவர் பெயரில் உள்ளது என்று கூறி சுதாகருக்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சுதாகர் இது குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்ர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நில மோசடியில் ஈடுபட்ட அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் (58) மற்றும் அம்பத்தூர் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (53) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இன்னொரு மோசடி
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி தாஜுதீன் என்பவர் கிருஷ்ணகிரியில் 73 ஆடுகளை விற்றதற்கான ரூ.14.63 லட்சத்தைப் பெற்று வருமாறு தனது டிரைவர் சம்பத் (40) என்பவரை அனுப்பி உள்ளார். பணத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பிய சம்பத், மதுரவாயல் அருகே தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது மர்ம நபர்கள் பணத்தைத் திருடிச் சென்றதாகவும் கூறினார்.
இதுகுறித்து தாஜுதீன் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் பணம் திருடு போனதாகக் கூறப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருட்டு எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியானது. தீவிர விசாரணையில், பணத்தை அபகரிக்கத் திட்டமிட்ட சம்பத், அதனைத் தனது வீட்டில் மறைத்து வைத்துவிட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.14.63 லட்சத்தைப் பறிமுதல் செய்தார்கள். அண்மையில் இதேபோன்று தான் கோயம்பேட்டில் போலீசார் வாகன சோதனை நடத்திய 14 லட்சம் பணத்தை பறித்ததாக ஒருவர் தனது கடை உரிமையாளரை நம்ப வைத்தார். அதன்பின்னர் கடனுக்காக அப்படி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைதும் செய்தனர்.












Click it and Unblock the Notifications