பத்திரப்பதிவு ரூல்ஸ் மாறுது.. வீடு விற்பனையில் வழிகாட்டி மதிப்பு அமலானது.. தமிழக பதிவுத்துறை அதிரடி
சென்னை : வீடு விற்பனைக்கான பத்திரப்பதிவின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டடங்களுக்கான, புதிய வழிகாட்டி மதிப்புகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்கள், சார் - பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்படுகின்றன. இதில், நிலத்துக்கான மதிப்பு, பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் இருக்க வேண்டும்.

அந்தவகையில், சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன..
திருத்தங்கள்: இதை ஏற்ற தமிழக அரசு, வழிகாட்டி மதிப்பில் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை சமீபத்தில் அமைத்தது. இந்த குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி வரை இருந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்த அரசு முடிவெடுத்தது.
மேலும், பதிவுக்கட்டணத்திலும் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.. இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வும், பதிவுக்கட்டணம் குறைப்பும் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
புதிய வழிகாட்டி மதிப்பு: இதை எதிர்த்து, கட்டுமான சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மக்கள் கருத்துகளை கேட்டு அதற்கேற்ப, வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள், மக்கள்கருத்துகளை கேட்டு அதன் பேரில்வழிகாட்டி மதிப்பானது, கடந்த மாதம் திருத்தி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எப்போதுமே கட்டிடங்களுக்கான மதிப்பை தனியாக கணக்கிடுவது அவசியமாகும்.. குறிப்பாக, பொதுப்பணி துறை ஆண்டுதோறும் வெளியிடும் மதிப்புகள் அடிப்படையில், கட்டடங்கள் மதிப்பிடப்படும். அந்த வகையில், 2024 - 25ம் ஆண்டுக்கான கட்டடங்களுக்கான மதிப்பு விபரங்களை, பொதுப்பணி துறை தற்போது வெளியிட்டுள்ளது.
விவரங்கள்: இதன் அடிப்படையில், கட்டடங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்புகளை வகைப்படுத்தி, பட்டியல் வடிவில், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை அனுப்பி உள்ளது... ஆகஸ்ட் 16 முதல் இந்த மதிப்புகள் அடிப்படையில் பத்திரங்கள் இருக்க வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள் இதுதான்:
- பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளில், தரைதளத்தில், 10.7 சதுர அடிக்கு, 11,515 ரூபாய்; முதல் தளம், 10,535 ரூபாய், இரண்டாம் தளம், 10,695 ரூபாய், 3வது தளம், 10,870 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
- மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், 10.7 சதுர அடிக்கு தரைதளத்தில், 12,667 ரூபாய்; முதல் தளம், 11,589 ரூபாய்; இரண்டாம் தளம், 11,765 ரூபாய்; 3வது தளம், 11,957 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
- அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு கூடுதல் தளத்துக்கும், 10.7 சதுர அடிக்கு, 163.30 ரூபாய் என்ற அடிப்படையில் மதிப்பு உயரும். இதேபோன்று கட்டுமான பொருட்கள் அடிப்படையில், கட்டடங்களுக்கான பல்வேறு நிலை மதிப்புகளையும் பதிவுத்துறை பட்டியலிட்டுள்ளது.
நிர்ணயம்: கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கட்டட மதிப்புகளுடன் ஒப்பிட்டால், இந்த மதிப்பு, 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக உள்ளது. இதன் அடிப்படையில் தான், புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கூட்டு மதிப்புகள் நிர்ணயிக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications