1.5 ஏக்கருக்கு 350 கோடி கேட்கும் உரிமையாளர்! கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்திற்கு முளைத்த சிக்கல்
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் ஆகாய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமேம்பாலம் அமைப்பதில் தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. 1.45 ஏக்கர் நிலத்திற்கு நில உரிமையாளர் ரூ.350 கோடி கேட்பதால் மேம்பாலம் அமைக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

கிளாம்பாக்கத்தில் நடைமேம்பாலம்
40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் விமான நிலையத்திற்கு நிகரான கட்டமைப்புகளுடன் பிரமண்டமாக கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், கோவை என வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்துதான் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகருக்குள் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைமேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கிளாம்பக்கம் ரயில் நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல ஆகாய நடைமேடை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
நிலம் கையகப்படுத்துவதில் புதிய சிக்கல்
ரூ.70 கோடி மதிப்பீட்டில் 1,110 மீட்டர் தொலைவிலான நடைமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. இந்த ஆகாய நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வரும் பயணிகள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் எந்த வித சிரமமும் இன்றி எளிதாக செல்ல முடியும்.
அதேபோல, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் இருந்தும் பயணிகள் எளிதாக ரயில் நிலையம் செல்ல முடியும். சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க காத்திருக்க தேவையிருக்காது என்பதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான், கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் புதிய சிக்கல் முளைத்துள்ளது. அதாவது, பாலம் கட்டுவதற்காக கிளாம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
ரூ.350 கோடி வழங்க வேண்டும்
இந்த அறிக்கை சட்ட விதிமுறைகளின்படி சரியாக இல்லை என்று நில உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பழைய அறிக்கையை ரத்து செய்துவிட்டு, விதிகளை பின்பற்றி புதிய அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து, இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், மேம்பாலத்திற்கு சொந்தமான நிலத்தை வழங்க ரூ.350 கோடி வழங்க வேண்டும் என நில உரிமையாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
திட்ட மதிப்பே ரூ.70 கோடிதான்
இந்த நிலத்தின் சந்தை மதிப்பு 60 கோடியாக இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளும் சிஎம்டிஏ நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடை மேம்பாலம் கட்டுவதற்கான திட்ட மதிப்பே ரூ.70 கோடிதான் என்ற நிலையில், ஒரு ஏக்கர் 45 சென்ட் நிலத்திற்கு மட்டும் நில உரிமையாளர் இவ்வளவு தொகை கேட்பதால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நடைமேம்பாலம் பயன்பாட்டு கொண்டு வரப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications