சட்டவிரோத மதுபான தயாரிப்பு, நுகர்வு தடுப்பில் குறைபாடு- தீவிர கவலைக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 18 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அதிருப்தியை வெளியிட்டுள்ளார். "சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்" என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.60க்கும் மேற்பட்டோர் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என எச்சரித்திருந்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications