"5 நிமிட தாமதம்.." எதிர்காலமே போச்சு! நுழைவு சீட்டை கிழித்து போராட்டம்.. குரூப் 4 தேர்வில் பரபரப்பு
சென்னை: இன்று மாநிலத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில், பல இடங்களில் தாதாக வந்த தேர்வாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Recommended Video
இன்று தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதற்கு மாநிலம் முழுதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாநிலம் முழுக்க 7,689 மையங்களில் தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 12.30 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற்றது.
பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் டெல்லி செங்கோட்டை.. சுற்றுலா பயணிகளுக்கும் தடை! இதுதான் காரணம்
குருப்-4 தேர்வு
தமிழக அரசுத் துறைகளில் இருக்கும் 7,301 காலி இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி இந்த குரூப் - 4 தேர்வுகள் இன்று நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். 12.67 லட்சம் பெண்கள், 9.35 லட்சம் ஆண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். பெரும்பாலும் அமைதியான முறையிலேயே இந்தத் தேர்வு நடத்தப்பட்டன.
சாலை மறியல்
இருப்பினும், சில இடங்களில் தாமதமாக வந்தவர்கள் கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் தேர்வாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சற்று தாமதமாகக் காலை 9.20 மணிக்குத் தேர்வு எழுத வந்த 18 பேரை நுழைவாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். நேரம் முடிந்து விட்டதால் இனி அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்துவிட்டனர். தேர்வர்கள் எவ்வளவோ கெஞ்சியும், போலீசார் அனுமதிக்க வில்லை. இதையடுத்து தேர்வு மையத்தின் முன்பு தேர்வாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருந்த போதிலும், அவர்களை மையத்தில் அனுமதிக்கவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாதவர்கள் கண்ணீருடன் திருப்பிச் சென்றனர்.
கிழித்து எறிந்து போராட்டம்
அதேபோல தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் தேர்வு நடைபெற்றது. அங்குத் தாமதமாக வந்த சுமார் 50 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. எவ்வளவோ கேட்டுக் கொண்டும் கூட தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த தேர்வாளர்கள் நுழைவு சீட்டை கிழித்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்கள் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தாரை முற்றுகையிட்டு போராட்டம்
சீர்காழி தென்காசியில் இருக்கும் தனியார்ப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 30க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களைத் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த அவர்கள் சீர்காழி தாசில்தார் செந்தில் குமாரையும் அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து தாசில்தார் 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் பிறருக்கு அனுமதி அளிக்கப்படாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்
தஞ்சை
தஞ்சையில் பல தேர்வு மையங்களுக்குத் தேர்வாளர்கள் 9.15 மணிக்குப் பிறகு வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்கள் 35, 40 கிலோமீட்டர் தொலைவில் போடப்பட்டுள்ளதாகவும் ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வரவே வெகு நேரம் ஆனதாகவும் ஹால் டிக்கெட்டில் 9.30 மணி எனப் போடப்பட்டுள்ளது ஆனால் 9.15 மணிக்கு வந்தாலும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்காததால் தங்களால் தேர்வு எழுத முடியவில்லை என புலம்பியபடியே திரும்பிச் சென்றனர்.
ஓசூர்
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் சில நிமிடங்கள் தாமதமாக வந்த நபர்கள் கூட தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் 50க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு உதவி இயக்குநரின் வாகனத்தை மறித்தனர். இதையடுத்து ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். வெளிவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்குத் தேர்வு மையங்களுக்குச் செல்ல முறையான வழிகாட்டுதல் இல்லாததே தாமதத்திற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் நேரம் முடிந்துவிட்டதால் அனுமதிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.