சட்டம் எல்லோருக்கும் சமம்..ராகுல்காந்தி அப்பீல் செய்யட்டும்..சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சட்டம் அனைவருக்கும் பொருந்தும், அதுதான் ஜனநாயகம். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட தண்டனை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் வகையில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் கட்சித்தலைவர்களும், கூட்டணி கட்சித்தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , ஒரு சாதாரண மனிதனுக்கு என்ன சட்டம் பொருந்துமோ அது ராகுல் காந்திக்கும் பொருந்தும். சட்டம் அனைவருக்கும் பொருந்தும், அதுதான் ஜனநாயகம். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட தண்டனையாக இருக்கும்போது, பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சட்டத்தின் அடிப்படையிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
தண்டனை என்பது சஸ்பெண்ட் செய்யப்பட்ட தண்டனை இல்லை. அப்படி இருந்தால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. தண்டனை உறுதி செய்யப்பட்டதனால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல்காந்திக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்று மக்கள் கேட்பார்கள். சட்டப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications