ஆண்கள் எஜமானர்களும் அல்ல; பெண்கள் அடிமைகளும் அல்ல -வழக்கறிஞர் அருள்மொழி
சென்னை: தண்டனைகளை கடுமையாக்கினால் மட்டும் குற்றங்கள் குறையாது என்றும் தவறு செய்ய தோன்றாத வகையில் ஒருவரது வளர்ப்பு முறை இருக்கவேண்டும் எனவும் கூறுகிறார் வழக்கறிஞர் அருள் மொழி.
மேலும், ஆண்கள் ஒன்றும் எஜமானர்களும் அல்ல; பெண்கள் அடிமைகளும் அல்ல எனத் தெரிவிக்கிறார் அவர்.
பெண்ணுக்கு நீதி எங்கே? என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்தரன் நடத்திய காணொலி கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

பெண் நீதி?
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் பெண்ணுக்கு எங்கே நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி, பிள்ளைகளின் வளர்ப்பு முறை பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார். பிறக்கும் போதே எல்லா ஆண்களும் தவறு செய்யமாட்டார்கள் என்றும் அவர்கள் வளர்த்தெடுக்கப்படும் முறையில் தான் பிற்காலத்தில் அவர்கள் குணாதிசயங்கள் மாறுபடுவதாக கூறினார்.

பெண் பிள்ளை
ஆண் பிள்ளைகளுக்கு என்றால் கூடுதல் செல்லமும் இஷ்டத்திற்கு விட்டுவிடுவதும் இன்றும் நடைமுறையில் இருப்பதாகவும் முதலில் இந்தப் போக்கை பெற்றோர் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆண் பெண் சமம் என்பதை சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுத்து பெண்கள் மீது கொள்ள வேண்டிய மரியாதையை சொல்லித்தர தவறுவதன் விளைவாக தான் இன்று பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக வேதனைத் தெரிவித்தார்.

மனநிலை
குற்றச்சம்பவங்களை தடுக்க கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது என்றும் தவறு செய்ய எண்ணாத வகையில் மனநிலையில் மாற்றம் வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆணும் பெண்ணும் சமத்துவம் என்பது தான் பெரியாரின் தத்துவம் என அருள்மொழி பெருமிதம் தெரிவித்தார். ஆதிக்க உணர்வை ஆண் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கக் கூடாது என பெற்றோருக்கு அறிவுரை நல்கினார்.

ஒழுக்கம் முக்கியம்
பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே ஒழுக்கத்தை சொல்லிக்கொடுத்து வளர்த்தாலே நாட்டில் பெரும்பாலான குற்றங்களை தடுக்க முடியும் எனக் கூறினார். மேலும், ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள் என்றால் அவளிடேமே குற்றம் கண்டுபிடித்து குறைகூறுவதை விடுத்து நேர்மறையாக சிந்திக்கக்கூடிய மனநிலை சமூகத்தில் ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications