கர்ப்பிணிக்கு எச்ஐவி வைரஸ் ரத்தம்.. அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை: எச்ஐவி பாதித்த ரத்தத்தை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றி, அவருக்கு நோய் பரவல் ஏற்பட காரணமாக இருந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
யார் ரத்த தானம் செய்தாலும் அதனை சோதனைக்கு உட்படுத்த வேண்டியது அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணி. இது கூட செய்யாவிட்டால் எப்படி? என்று கேள்வி எழுப்பினார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், சுகாதரத்துறை, தற்காலிக ஊழியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படவில்லை. குற்றத்திற்கான பொறுப்பை ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் பதவி விலக வேண்டும். ரத்ததான நடைமுறையில் தணிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். நன்ககு வாழ வேண்டிய ஒரு குடும்பம் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது என்று வேதனை தெரிவித்தார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில், ஏழைகளிடம் தொடர்ந்து காட்டப்படும் அலட்சியத்திற்கு, இனியாவது அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.