அண்ணாமலை மீது வழக்கு பதிவு சரிதான்.. காவல்துறை நடவடிக்கைக்கு வரவேற்பு.. காங் எம்பி மாணிக்கம் தாகூர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது வரவேற்க தக்கது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணாமலை மீது தமிழக காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக காவல்துறை நல்ல முடிவை சட்டப்பூர்வமாகவும் நியாயமாகவும் எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவின.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, அவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. வட மாநில தொழிளார்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.

அண்ணாமலை அறிக்கை
இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்னாமலை 'வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதல்வர்?' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தார். அதில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் வடமாநிலத்தவர்கள் பற்றி பேசிய பேச்சுக்களையும் குறிப்பிட்டு இருந்தார். அண்ணாமலை வெளியிட்ட இந்த அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மண்ணடியைச் சேர்ந்த குமரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வதந்தி பரப்புதல், இருபிரிவினர் இடையே மோதலை உண்டாக்குதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், முடிந்தால் தன்னை திமுக அரசு கைது செய்யட்டும் என்று சவால் விடுக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.

திராணி இருந்தால் கைது செய்யவும்
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!" என்று பதிவிட்டு இருந்தார்.

மாணிக்கம் தாகூர் கருத்து
அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அதை தொடர்ந்து அண்ணாமலை கொடுத்த காட்டமான பதிலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளானது. இந்த நிலையில், அண்ணாமலை மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வரவேற்கத்தக்கது
இசட் பிளஸ் பாதுகாப்பை வைத்துக்கொண்டு திராணி இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள்.. திராணி இல்லையென்றால் என்னை கைது செய்யாமல் இருங்கள்.. என்று சொல்வது போன்ற வீண் சவுடாலை அண்ணாமலை விட வேண்டும். அண்ணாமலை மீது தமிழக காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக காவல்துறை நல்ல முடிவை சட்டப்பூர்வமாகவும் நியாயமாகவும் எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications