இருக்கு கச்சேரி.. ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை மட்டும் பயன்படுத்தட்டும்.. ஜெயக்குமார் எச்சரிக்கை!
சென்னை: அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார்.

எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்து இன்றைக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னம் என்பது எங்களுக்கு மட்டும் சொந்தமானது. இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது ஃபோர்ஜரி. அதற்காக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசுதான். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது கொரோனா காரணமாக நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்கு விசாரணை தடைப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை நடந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து இப்போது கோடநாடு வழக்கை விசாரிக்கிறது.
அதிமுகவின் ஒரே கேள்வி கோடநாடு குற்றவாளிகளை திமுக வழக்கறிஞர்கள் ஜாமினில் எடுத்தது ஏன் என்பது தான். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் வலியுறுத்தினார். ஒருநாள் காட்சி மாறும். ஆட்சியும் மாறும். திமுக அரசில் நடைபெற்று வரும் அராஜகங்கள் கண்டிப்பாக விசாரிக்கப்படும்." எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் இன்று, "கோடநாடு கொலை வழக்கு குற்றவாளி யார்? கோடநாடு பண்ணை பங்களா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஓய்விடம் இல்லை. அது அவர்களின் முகாம் அலுவலகம். கோடநாடு கொலை வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications