தர்மயுத்தம் மூலம் அடக்க நினைத்தவர் ஓபிஎஸ்.. அதிமுகவை காப்பாற்றியவர் இபிஎஸ்: வளர்மதி சீற்றம்..!
சென்னை: ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
பரபரப்பு, கூச்சல், குழப்பம் என முடிவடைந்துள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் வரலாற்றில் முக்கிய நாளாக இருக்கும். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பொதுக்குழுவில் ஏற்பட்ட நிகழ்வுகளை அவ்வளவு சாதாரணமாக ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஜூன் 14ம் தேதி மாலையில் இருந்து ஜூன் 23ம் தேதி மாலை வரை அடுத்தடுத்து ஆலோசனைகள், அறிக்கைகள், கோஷங்கள், செய்தியாளர் சந்திப்பு, தொண்டர்களுடன் சந்திப்பு, அணிமாற்றம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று அதிமுக கூடாரமே பரபரப்பாக இருந்தது.
சென்னையில் சசிகலா வீடு முன்பு திடீரென குவிந்த அதிமுக தொண்டர்கள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கம்!
பொதுக்குழு கூட்டம்
பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக தீா்மானங்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் 23 தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினாா். அதற்கு பதிலளித்த அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன், ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினா்களும் வைத்தனா். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் இப்போதே அறிவிக்க வேண்டும் என்று கோரினா். அதன்படி ஜூலை 11-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் பொதுக்குழுவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஓபிஎஸ் மனு
இதனைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஓபிஎஸ், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். அதில், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது. இது அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளர்மதி பேட்டி
இந்தநிலையில் சென்னையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்ட ஏராளமானோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த உறுப்பினர்களை காட்டுமிராண்டிகள் என்று கூறுவது நியாயமில்லை. ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்தை நடத்த சட்டரீதியாக அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
எதற்கும் தயார்
தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்ததில் இருந்து, ஓபிஎஸ் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டு வந்தது. இனியும் அதுபோன்ற வழக்குகளை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் எதிர்கொள்வார். தர்மயுத்தம் மூலம் அதிமுகவை அடக்கி, ஒடுக்க நினைத்தவர் ஓபிஎஸ். அதனை எல்லாம் கடந்து இன்று எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என்று அனைவராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ்-ஐ திமுக இயக்குகிறதா என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, இதனை ஓபிஎஸ்-டம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.